ஜெயலலிதா மரணம்: விசாரணை நிறைவு.. ஆகஸ்ட் 3ல் இறுதி அறிக்கை வேண்டும்.. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உத்தரவு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 டிசம்பர் மாதம் 5ல் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா இருந்த பதவியில் வேறு யாரும்? முட்டாள்தனம்.. ஓபிஎஸ் திமுக பி டீம்..விளாசிய அதிமுக நிர்வாகி!
விசாரணை துவங்கிய ஆணையம்
இந்த விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் விசாரிக்க துவங்கியது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே விசாரணை ஆணையத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது மருத்துவ வல்லுநர் குழு முன்னிலையில்தான் மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஆணையம் ஏற்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 ஆண்டுக்கு பின் மீண்டும் விசாரணை
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 2 ஆண்டுகள் கழித்து மார்ச் மாதம் 7ம் தேதி மீண்டும் விசாரணை துவங்கியது. மருத்துவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி விசாரணை ஆணையத்தின் விசாரைணை நிறைவுக்கு வந்தது.
ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல்
இந்த விசாரணை காலத்தில் மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆணையத்தின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி முடியாததால் ஆணையம் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசும் கூடுதல் அவகாசம் வழங்கி வந்தது. இந்நிலையில் தான் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆணையிட்டுள்ளது.