ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளரை நியமித்த தமிழக அரசு - ஏன்?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி தர்மயுத்தம் தொடங்கியவரே ஓ.பன்னீர் செல்வம்தான். அவர் எழுப்பிய சந்தேகத்தின் பேரிலேயே ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த வாரம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் சில மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாக இளவரசி கூறினார்.

ஓபிஎஸ் வாக்குமூலம்
ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டு நாட்கள் ஆஜரானார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞரும், சசிகலா தரப்பு வழக்கறிஞரும் கேள்விகளை முன்வைத்தனர். முதல்நாளில் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொன்னார் ஓ.பன்னீர் செல்வம்.

ஜெ. மரணத்தில் சந்தேகமில்லை
இரண்டாவது நாள் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் எதுவுமில்லை என்றும் பொதுமக்களின் சந்தேகத்தை தான் வெளிப்படுத்தியதாகவும் கூறினார். ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதித்திட்டம் தீட்டவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் மூலம் சசிகலாவிற்கு நிம்மதியை கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

அடுத்த கட்ட நகர்வு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கு விசாரணை முழுவதுமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவிடம் நேரில் வாக்குமூலம் பெற சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் தனது வாக்குமூலத்தில் சிலரது பெயரை குறிப்பிட்டுள்ளதால் அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் சசிகலா, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஆணையத்தின் செயலாளர் மாற்றம்
இந்நிலையில் தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதிலிருந்து அதில் செயலாளராக இருந்து வந்தவர் சிவசங்கரன். 90 % விசாரணை நிறைவுபெற்றுள்ள நிலையில், சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். ஆகையால் புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications