அதிமுகவில் அஜித்? நேரம் பார்த்து காத்திருக்கும் விஜய்! யாருக்கு எதிர்காலம்? ஜெ. நிழல் சொன்ன கணக்கு!
சென்னை : அஜித் அவர்களை அதிமுக-விற்கு அழைத்து வர நீங்கள் முயற்சி செய்யக்கூடாதா? என்று என்னிடம் கேட்ட நிர்வாகிகளும் உண்டு எனவும், நடிகர் விஜய் அரசியலுக்கு வர சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித், விஜய். இருவரும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இருவர் நடித்துள்ள துணிவு, வாரிசு படம் தற்போது பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
எந்த படம் நல்ல படம்? ஹிட்டா ப்ளாப்பா? வசூல் என்ன அவர்களது ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ள நிலையில், பொதுவான ரசிகர்கள் இரு படங்களுமே நன்றாக இருக்கிறது என்கின்றனர். மேலும் இரு படங்களுமே நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
விஜய், அஜித் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்..
பூங்குன்றன்
அஜித் அவர்களை அதிமுக-விற்கு அழைத்து வர நீங்கள் முயற்சி செய்யக்கூடாதா? என்று என்னிடம் கேட்ட நிர்வாகிகளும் உண்டு எனவும், நடிகர் விஜய் அரசியலுக்கு வர சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," "வாது" படம் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அப்படி ஒரு படம் வரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இன்னுமாங்க புரியலை.. நான் சொல்வது வாரிசின் முதல் எழுத்தும், துணிவின் முதல் எழுத்தும் சேர்த்துதான்..! இரு கதாநாயகர்களுக்கும் ஆத்மார்த்தமான ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
துணிவு - வாரிசு
அவர்களுக்காக எதையும் செய்ய துணிவும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியும், திரைப்படத்தின் பின்னால் இயங்கிய தொழிலாளர்களின் மகிழ்ச்சியும் தான் எப்போதும் முக்கியம். இரு படங்களின் வெற்றி, தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக அமையவும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையவும் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள். துணிவுதான் வெற்றியைத் தரும் இல்லை இல்லை வாரிசுதான் வெற்றியைக் கொடுக்கும் என்று மக்கள் வாதிட்டு கொண்டிருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலுக்கும், படத்திற்கும் சம்மந்தம் இருக்குமோ? என்று மனம் சந்தேகப்பட்ட போது, அப்படியெல்லாம் கிடையாதுப்பா..!
அதிமுகவில் அஜித்
அரசியலையும், திரைப்படத்தையும் ஏன் முடிச்சுப் போடப் பார்க்கிறாய் என்று என் மனசாட்சி உண்மையை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது. படத்தின் தலைப்பே சில நேரங்களில் படங்களுக்கு பெரிய விளம்பரமாக அமைந்து விடுகிறது அல்லவா..! அஜித் அவர்களை அதிமுக-விற்கு அழைத்து வர நீங்கள் முயற்சி செய்யக்கூடாதா? என்று என்னிடம் கேட்ட நிர்வாகிகளும் உண்டு. சிலர் தொடர்ந்து அஜித் அவர்களோடு பேசும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அஜித் அவர்களுக்கு இதில் ஆசை இல்லை என்பதுதான் எனக்கு வந்த தகவல். அம்மா (ஜெயலலிதா) அவர்கள் மீது அஜித் வைத்திருந்த மரியாதையைப் பார்த்த சிலருக்கு அவர் மீது காதல் வரத்தானே செய்யும்..!
அரசியலில் விஜய்
மறுபக்கம் விஜய் அவர்கள் அரசியலில் வருவதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் முழுதாக அவர் இன்னும் அரசியலில் இறங்கவில்லை. வருவார் என்பது உண்மை. அவர் எப்போது வருவார் என்பதுதான் தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறுவதை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாரோ..!
சிறப்பான எதிர்காலம்
கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் தொடர்ந்து தமிழக அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் பெரும்பாலான மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது. எது எப்படியோ..! இன்றிருக்கும் சூழ்நிலையில், அரசியல் அரங்கில் முதலில் கால்பதிப்பவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அடடா .! நான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போயிட்டேன். திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.