எடப்பாடி பழனிசாமியின் அடுத்த முயற்சி.. "வேதா இல்லம்" உத்தரவை எதிர்த்து.. ஹைகோர்ட்டில் அதிமுக அப்பீல்
வேதா இல்லம் தொடர்பாக அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது... அதேபோல தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகளையும் அரசுடைமையாக்கியது கடந்த அதிமுக அரசு..
இதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கு இழப்பீட்டுத் தொகையாக 67.9 கோடி ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டது... இதை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜெயலலிதா
ஆனால், "மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டதாகவும், அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில் மனுதாரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை என்றும், அரசு தரப்பில் எதிர்வாதமாக முன்வைக்கப்பட்டது.
உத்தரவு
இறுதியில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஹைகோர்ட், வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கிய அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லி சென்னை கலெக்டருக்கு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டிருந்தது... இதனிடையே, வேதா இல்லம் குறித்து கட்சியினருடன் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டும் என்று 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தந்திருந்தார்.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்... அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.. அந்த மனுக்களில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல என்றும், உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதி கருத்துக்கள் தேவையற்றவை எனவும், இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்
நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்து விட்டால், அது கட்சிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை அமைத்ததன் நோக்கம் வீழ்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதா நிலையம் கையகப்படுத்தப்படும் முன் தீபா, தீபக் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.
2 மனுக்கள்
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், பொது பயன்பாடு இல்லை என தனி நீதிபதி முடிவுக்கு வந்திருக்க கூடாது என்பதால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.