ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை.. ராஜினாமா கடிதத்தில் கே.பாக்யராஜ் பகீர்!
Recommended Video
சென்னை : தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சிக் கேட்டும் உடன்படாததாலேயே சர்கார் கதையை வெளியே சொல்ல நேர்ந்ததாகவும் இதனால் பல அசவுகரியங்களை சந்தித்ததாகவும் பாக்யராஜ் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் மெர்சல் படத்திற்கு அதில் இருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று பார்த்தால், சர்கார் படத்தில் கதை யாருடையது என்பதிலேயே சர்ச்சை ஏற்பட்டது. சர்கார் கதை தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள செங்கோல் கதை என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் தலையிட்டு உண்மை என்ன என்பதை ஆராய்ந்து நடுநிலையான முடிவை அறிவித்தார். அதில் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்றே என்று அவர் கூறி இருந்தார். இந்நிலையில் வருண் ராஜேந்திரனிடம் சர்கார் படக்குழு சமரசம் பேசியதையடுத்து வழக்கு வாபஸ் பெற்று தீபாவளிக்கு சர்கார் வெளியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது.
[எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ்]
நடுநிலை கே.பாக்யராஜ்
இந்த விவகாரத்தில் நடுநிலையோடு உண்மையை சரியான முறையில் வெளிக்கொண்டு வந்த கே.பாக்யராஜிற்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் திடீர் திருப்பமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்த கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
நியாயமாக எடுத்த முடிவு
அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், சர்கார் படம் சம்பந்தமா சங்கத்திற்கு வந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதால் அவருக்கு நியாயம் வழங்கினேன். பொறுப்பில் இருக்கும் முக்கியமானவங்க எல்லோரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து நல்லபடியாக நியாயாமா அதை செயல்படுத்தவும் முடிந்தது.
அசவுகரியத்தை சொல்ல விரும்பல
ஆனால் இந்த விவகாரத்தால் பல அசவுகரியங்களை சந்தித்தேன். அதுக்கு முக்கிய காரணமாக நான் நினைக்கிறது தேர்தலில் நின்று தலைவர் பதவிக்கு வராமல் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வந்ததே என நினைக்கிறேன். எனவே எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறையா நின்று மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு தொடர்ந்து கடமையோட செயல்படுவேன் என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
|
உடன்படாத முருகதாஸ்
மேலும் தனக்கு நேர்ந்த அசவுகரியங்கள் என்ன, ஒழுங்கீனங்கள் என்ன என்பதை சங்க நலன் கருதியும் நற்பெயர் கருதியும் வெளியே சொல்ல விரும்பல என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார். முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படவில்லை. இதனாலேயே பெரிய நிறுவனமான சன்பிக்சர்ஸ்ன் கதையை வெளியே சொல்ல நேர்ந்தது. எனினும் தவறை உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.