உடைக்கனும்னு சொல்லி எஸ்கேப்பான கனல் கண்ணன்! ஸ்ரீரங்கத்துக்கு பெரியார் சிலை எப்படி வந்தது தெரியுமா?
சென்னை : சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும் இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன் 'கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும்' என பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உண்மையில் ஸ்ரீரங்கம் ஆலயம் முன்பு பெரியார் சிலை எப்படி வந்தது? அதன் பின்னணி என்பது என்ன? என்பது குறித்தான சுவாரசிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 30ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணியின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் நிறைவுரை பொதுக்கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி கலை, இலக்கிய பிரிவு மாநில தலைவருமான கனல் கண்ணன் கலந்து கொண்டார்.

கனல் கண்ணன்
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவரை சிலை இருக்கிறது அந்த சிலையை உடைக்க வேண்டும் அந்த நாள்தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் என பேசினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் முன்பு பெரியார் சிலை தான் இருக்கிறது பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கனல் கண்ணன் பேசியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கடும் கொந்தளிப்பு
மேலும் அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனல் கண்ணனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரியார் சிலை
பொதுவாகவே தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோயில்கள் முன்பு பெரியார் சிலை அமைக்கப்பட்டு இருப்பதும் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் உலகப் புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரத்தின் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டது எப்படி என்பது பலருக்கு தெரியாது. அதனை வைக்க பாடுபட்டவர்கள் பிராமணர்கள் என்பது பலருக்கு தெரியாது.

யார் காரணம்?
1973 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடேச தீக்சிதர் ஸ்ரீரங்கம் நகராட்சி தலைவராக இருந்தபோது பெரியாருக்கு சிலை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதற்கான இடத்தையும் ஒதுக்கினார். ஸ்ரீரங்கம் பகுதியின் வார்டு கவுன்சிலராக இருந்த ராஜகோபால் இதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்தார். இருவருமே பிராமணர்கள் குறிப்பாக ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் கடும் எதிர்ப்புகள் காரணமாக அங்கு சிலை வைக்கப்படாத நிலையில் 1996 ஆம் ஆண்டு தான் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையையும் இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்தே தற்போது இருக்கின்ற வெண்கல சிலையானது 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications