கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் மழை பெய்யுமாம்..ரெயின் கோட் அவசியம்
சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரப்போகிறது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் அது வலுவடைந்து புயலாக மாறுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்து விட்டது. புயல் அச்சம் நீங்கியதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்றைய தினம் அதிகாலை முதல் பல ஊர்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்தின் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வலுவிழந்த காற்றழுத்தம்..பல ஊர்களில் திடீர் மழை..சிவகாசியில் சாரல்..இன்று யாருக்கு குடை அவசியம்