'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்'... புகைப்படத்துடன் கனிமொழி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது மகளும் திமுக எம்பியுமான கனிமொழி உருக்கமான பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதி இதே ஜூன் 3 ம் நாளில்தான் 1924 ஆம் ஆண்டு பிறந்தார். இன்று அவரது 98வது பிறந்த நாள் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் வேரூன்ற காரணமாக இருந்தவர் கருணாநிதி. சமூக நீதிக்காவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டவர். தமிழகத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகப்பெரியது.
தமிழகத்திற்காக உழைத்தவர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி அவரது மகனும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடந்த வருடம் சில விஷயங்களை கூறி இருந்தார். அதை அப்படியே பார்ப்போம். 1957-ம் ஆண்டு முதல் தனது இறுதி மூச்சு நின்ற காலம்வரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் வென்று, சட்டப்பேரவையில் பங்கெடுத்து, இச்சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் அவர் ஆர்வத்துடனும், தனித் திறமையுடனும் வாதாடினார். 1969-ம் ஆண்டு முதல் ஐந்து முறை - மொத்தம் 19 ஆண்டுகள், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து, அவர் இட்ட ஒவ்வொரு கையெழுத்தும் தமிழகத்தின் தலையெழுத்தைத் தகவமைத்து மாற்றுவதாகத்தான் அமைந்திருந்தன.
லட்சத்திற்கு போராடியவர்
ஒரு லட்சியத்துக்காகப் போராடியவரே, அதே லட்சியத்தை நிறைவேற்றும் இடத்துக்கும் வந்து, அதை நிறைவேற்றியும் காட்டிய மாபெரும் பெருமையும், வரலாற்று உரிமையும் கலைஞருக்கே உண்டு.. 'சாமானியர்களின் தலைவர்' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் மட்டுமல்ல; அனுதினமும் அப்படியே நடந்தும் காட்டியவர். ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்துக்கும், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்துக்கும் எது அத்தியாவசியமாகத் தேவையோ, அதை அவர்களது இடத்தில் இருந்தே சிந்தித்தவர் கலைஞர். நாட்டுக்குத் தொண்டராக இருந்த அவர், ஒவ்வொரு வீட்டுக்கும் தூண்டா மணிவிளக்காக இருந்தார். அதனால்தான் இந்த நாட்டுக்கே, நானிலமும் வியந்தேத்தும் தலைவராக உயர்ந்தார்.
மக்களின் தேவைகள்
முதுமை நிலையில், வீட்டில் ஓய்வெடுத்த காலத்தில் கூட அவரது இதயம், இம்மக்களுக்காகத்தான் துடித்தது. அவர்களுக்காகவே எப்போதும் சிந்தித்தது. எங்களை நோக்கி அவர் இட்ட கட்டளைகள் அனைத்தும், மக்கள் நலன் சார்ந்ததாக, மேம்பாடு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்காகவே சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து, இயங்கிய அந்தத் தலைவரின் பிறந்த நாளை, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அப்பாக்களின் நாற்காலிகள்
இந்நிலையில் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி தனது அப்பாவின் நினைவுகளை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என்று கூறியுள்ளார்.