ஜெயலலிதா இறந்தது டிச.4 தான்.. 2 பேரும் ஏற்கணும்! அரசு பதிவேடுகளை திருத்தணும்.. கேசி பழனிசாமி பளிச்!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தேதி டிசம்பர் 4 என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ளது, அதன்படி அரசாங்க பதிவேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி.
மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று தான் எனத் தெரிவித்தார்.
மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமியும், அமைக்கச் சொன்ன ஓ.பன்னீர்செல்வமும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 4 : 6 ஆண்டுகளாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி ஜெயலலிதா நினைவு நாள் இன்றுதான்!
ஜெயலலிதா இறந்த நாள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதா இறந்த தேதியும் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியும் வேறு வேறு என ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்திருக்கலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
டிசம்பர் 5
இதனாஅல் அதிமுகவினர் ஜெயலலிதா நினைவு நாளை எப்போது அனுசரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. டிசம்பர் 4ஆம் தேதியா இல்லை டிசம்பர் 5ஆம் தேதியா என்ற குழப்பம் எழுந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல டிசம்பர் 5ஆம் தேதியையே ஜெயலலிதா நினைவு நாளாக அனுசரிக்கின்றனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்புமே நாளை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இன்றே நினைவு நாள்
அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி டிசம்பர் 4ஆம் தேதியான இன்றே ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்துள்ளார். முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று (டிசம்பர் 4) தான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.
2 விஷயங்கள்
மேலும் பேசிய கே.சி.பழனிசாமி, "கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிந்து உலகிற்குச் சொல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு இரண்டு விஷயங்களில் சமரசமே கிடையாது. ஒன்று, ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் யார்? அவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது, கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயலலிதாவின் உண்மையான நினைவு நாளான இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம்.
அமைத்தவர் - சொன்னவர்
ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே இவர்கள் இருவரும் அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரையில் அவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை அதில் குறிப்பிட்டுள்ள தேதியை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அரசு பதிவேடுகளில்
எனவே, அடுத்த ஆண்டிலிருந்தாவது ஜெயலலிதாவின் உண்மையான நினைவு நாளான டிசம்பர் நான்காம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும். மேலும், ஆறுமுகசாமிஆணையத்தின் அறிக்கைப்படி தமிழக அரசும், மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை டிசம்பர் 4 என்று அரசாங்கப் பதிவேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
எழும் கேள்வி
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 5ஆம் தேதியை ஜெயலலிதா நினைவு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அரசாங்க பதிவேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் கேசி பழனிசாமி. ஆணைய அறிக்கையின்படி அரசு பதிவேடுகளில் ஜெயலலிதா நினைவு நாள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி மாற்றப்பட்டால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே டிசம்பர் 4ஆம் தேதி நினைவு நாளாக கடைபிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.