உயிர் தப்பி வந்தும் திருந்தாத "வாவா சுரேஷ்".. பாம்பை வைத்து இப்படியா பண்ணுவாரு? வனத்துறை வைத்த செக்!
சென்னை: சமீபத்தில்தான் பாம்பிடம் கடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று திரும்பிய வாவா சுரேஷ், மீண்டும் விஷத்தன்மை அதிகம் கொண்ட நல்ல பாம்பை தனது முகத்துக்கு அருகே வைத்து சொற்பொழிவு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்த சூழலில், பாம்பினை அலட்சியமாக கையாண்டதாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
வாவா சுரேஷின் இந்த அலட்சியமான நடவடிக்கையால் கேரள மக்களும், அவரது குடும்பத்தினரும் மிகவும் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாம்புடன் "செம" க்ளோஸ்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். சிறு வயது முதலே பாம்புகளிடம் அதிக நெருக்கம் கொண்டவராக இருப்பதால் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், பாம்பு பிடிக்கும் வேலையில் முழு நேரமாக அவர் இறங்கிவிட்டார். முதலில், தனது சுற்றுப்பகுதியில் யார் வீட்டிலாவது பாம்பு புகுந்துவிட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் அவர் விட்டுவந்தார். ஒரு கட்டத்துக்கு மேல், கேரளாவில் எங்கு பாம்பு தொல்லை என்றாலும் வாவா சுரேஷை தொடர்புகொள்ளும் அளவுக்கு அவர் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

ஆபத்தான நிலையில் அனுமதி
இதுவரை தனது வாழ்நாளில் 30,000 பாம்புகளை எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பிடித்துள்ள வாவா சுரேஷ், 3000 பாம்புகளிடம் கடிபட்டுள்ளார். இதில் 800 பாம்புகள் கொடிய விஷத்தன்மை கொண்டவை ஆகும். பாம்பு கடித்ததால் பல முறை ஐசியு வரை சென்றுள்ள வாவா சுரேஷுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மிகப்பெரிய கண்டம் வந்தது. கோட்டயத்தில் ஒரு வீட்டில் புகுந்த கருநாகத்தை பிடித்த வாவா சுரேஷ், அதை சாக்குப்பையினுள் போடும் போது அவரது தொடையில் கடித்துவிட்டது. விஷம் ஏறியதால் மயக்கமடைந்த வாவா சுரேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷை காப்பாற்றுவது மிகவும் கடினம் எனக் கூறிவிட்டனர்.

மீண்டு வந்த வாவா சுரேஷ்
இந்த தகவல் கிடைத்ததும் கேரள மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். கோயில் கோயிலாக சென்று வாவா சுரேஷ் உயிருடன் வர வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்த சூழலில், மெடிக்கல் மிராக்கல்லாக உயிருடன் மீண்டு வந்தார் வாவா சுரேஷ். பின்னர் பல ஊடகங்களில் பேட்டியளித்த அவர், இனி பாம்பை தக்க உபகரணங்களுடன் தான் கையாள்வேன் எனக் கூறினார். இதனால் வாவா சுரேஷ் திருந்திவிட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர் திருந்தவில்லை என்பதை நேற்றைய அவரது செயல்பாடுகள் காட்டின.

முகத்துக்கு அருகே நல்ல பாம்பு
கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் மாணவிகளுக்கு பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாவா சுரேஷ் நேற்று உரையாற்றினார். அப்போது பேசிக்கொண்டிருந்த போதே, தான் கொண்டு வந்த பையில் இருந்து 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை எடுத்து தனக்கு முன்னால் இருந்த மேஜையின் மீது வைத்தார். அவரது முகத்துக்கு 3 இன்ச் தூரத்தில் இருந்த நல்ல பாம்பு அவரை பார்த்து படம் எடுத்து ஆடியது. இதை பார்த்து அங்கிருந்த மாணவிகள் அலறினர். பின்னர் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விழாவை முடித்துக் கொண்டனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதை அடுத்து, பாம்பை அலட்சியமாக கையாண்டதாக வாவா சுரேஷ் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications