அவரே அமைதிகாக்கும் போது; இவர்கள் ஏன் இப்படி குதிக்கிறார்கள்; வக்கீல் பாபுமுருகவேல் யாரை சாடுகிறார்?
சென்னை: நீதியரசர் சஞ்சீப் பானர்ஜி பணியிடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முனைவது நீதித்துறைக்கு விடப்பட்ட பெரிய சவாலாக பார்ப்பதாக வழக்கறிஞர் பாபு முருகவேல் கவலை தெரிவித்துள்ளார்.
பணியிடமாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட நீதியரசரே எவ்வித எதிர்வினையும் ஆற்றாத போது ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கங்களும் இதுபோன்ற நிகழ்வில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என அவர் சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நீதியரசர்கள்
''நீதித்துறையில் நீதி அரசர்களின் நியமனம் -பணியிடமாறுதல் -பதவி உயர்வு போன்ற அனைத்துமே முதல் படியாக உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும், கொலிஜியத்தின் முழுமையான ஆளுகைக்கும் உட்பட்ட ஒரு நிகழ்வு. இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக பணிபுரிந்த நீதியரசர் சஞ்சீப் பானர்ஜியை பணியிட மாற்றம் செய்திருப்பது உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் நடை முறைக்கு உட்பட்டது.''
பெரும் சந்தேகம்
''ஆனால் இந்த பணியிடமாற்றம் தற்போது அரசியலாக்கப்படுவதாக நான் உணர்கிறேன். காரணம் தற்போது பணி அமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிஅரசர் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலா அல்லது இங்கிருக்கக்கூடிய சில அரசியல் இயக்கங்கள் தாங்கள் எண்ணியதுதான் நடக்கவேண்டும் என்பதாலா என்ற ஒரு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.''
நீதித்துறைக்கு சவால்
''மாண்புமிகு நீதியரசர் சஞ்சீப் பேனர்ஜி பணியிடமாற்றம் செய்திருப்பதை ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவதும், இந்த பணி இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முனைவதும், ஒருசில அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் இந்த பணி இடமாற்றத்திற்கு எதிராக அறிக்கை விடுவதும் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாக நான் பார்க்கிறேன்.''
உள்நோக்கம்
''காரணம் இதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக இருந்த நீதியரசர் தகில் ரமணி இதே மேகாலயா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது இதுபோன்ற கண்டன குரல்களும், கையெழுத்து இயக்கமும், அரசியல் தலைவர்களின் அறிக்கைகளும் வறவில்லை. மாறாக தற்போது நீதியரசர் சஞ்சீப் பேனர்ஜி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு இதுபோன்ற கண்டனக் குரல்கள் எழுவது மிகப்பெரிய அரசியல் உள் நோக்கம் இருப்பதாக நான் பார்க்கிறேன்.''
கண்டனம்
''இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட நீதியரசர் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாத போது ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கங்களும் இதுபோன்ற நிகழ்வில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. உச்சநீதிமன்ற உத்தரவின் மீது ஐயம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியதாக கருதப்படும்.''
எல்லை உண்டு
''ஆளுகின்ற ஆட்சியாளர்கள் விரும்புகின்ற நீதிபதிகள் தான் நீதிமன்றங்களில் பணியாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாக்க முனைகின்ற, இதுபோன்ற தீய சக்திகளை நீதித்துறை தன்னுடைய இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். வழக்கறிஞர் என்ற முறையில் இதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவரவர் அவரவர்களுடைய எல்லைக்குள் இருந்து பணியாற்ற வேண்டும். நானும் என்னுடைய எல்லைக்குள் இருந்து ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் இந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டுவது என்னுடைய பொறுப்பாக நான் உணர்கிறேன்.''