ரூ. 1000 பத்தாது.. 5000 தேவை.. உடனே வழங்கினால்தான் பசியின்றி வாழ முடியும்.. நெடுமாறன் குழு கோரிக்கை
மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை: "இந்த 1000 ரூபாய் உதவி தொகை யானை பசிக்கு சோளப்பொரி போன்றது.. ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்பட்டால் கூடுதலாக ரூ.5000 ஆயிரம் உதவி தொகையை தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும்.. உடனே வழங்கினால்தான் மக்கள் பசியின்றி வாழ முடியும்... ஒரு பக்கம் விலையேற்றம், இன்னொரு பக்கம் பதுக்கல்காரர்களின் கொள்ளை லாபம்.. அதனால் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது!
Recommended Video
பழ.நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார் சரவணன், சுப உதயகுமாரன் இவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஒன்றினை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த குழு மூலம் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வேண்டுகோளையும், கோரிக்கைகளையும் கூட்டாக வெளியிட்டும் வருகின்றனர்.
அதேபோல, இந்தியாவில் செய்திருக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்டு விட்டு, அதை மூடிமறைக்க ஒரு சமூகத்தின் மீது கை காட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல என்பது போன்ற கண்டனங்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் மீண்டும் ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர். அதில், உஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக உடனே வழங்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தள்ளனர்.
அந்த அறிக்கை இதுதான்: "கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமான ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் வேலையின்மையால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பொருளாதாரம் இன்மையால் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் தான் அவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அரசு அளிக்கும் ரூ.1000 உதவித்தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாக உள்ளது.
மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமானது பொதுமக்களை மென்மேலும் துயருக்குள் தள்ளுகிறது. பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலையானது 30% முதல் 50% வரை உயர்ந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலையேற்றம் நிகழ்ந்தாலும், மறுபுறம் பதுக்கல்காரர்களின் கொள்ளை லாப நோக்கமும் இத்தகைய விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.
ஆகவே, தமிழக அரசு இத்தகைய வெளியேற்றத்தை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுவை நியமித்து விலைவாசி ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி சந்தைகளில் அதிக அளவுக்கு இடைத்தரகர்களால் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருகிலோ மிளகாய் கிலோ ரூ.10க்கும் குறைவாக விவசாயிகளுடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அது கடைகளில் கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்கப்படுகின்றது. இதுபோன்று பலவகையான காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவதோடு, ஊரடங்கால் வருமானம் இன்றி முடக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.
ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில் அரசு குறைந்தது கூடுதலாக ரூ.5000 ஆயிரம் உதவித் தொகையை தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கினால் மட்டுமே, மக்கள் பசியின்றி வாழ முடியும். இல்லாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் பசிபட்டினியில் சிக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என்பதையும் மத்திய மாநில அரசுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.