எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
கொரோனா பரவலுக்கு முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
சென்னை: கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 15 நாட்களாக பகுதி நேர ஊரடங்கும், 11 நாட்களாக முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவது குறித்த சந்தேகங்களைத் தான் ஏற்படுத்துகிறது என்று சொல்லும் அவர், நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1816 அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி கொரோனா தொற்று ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடந்த 10 நாட்களில் இது தான் முதல் முறையாகும். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பயனளிக்கும் வகையில் உறுதியாகவும், கடுமையாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அண்டை மாநிலங்களில் ஊரடங்கு காலத்தில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருவதிலிருந்தே ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை என்பதை ஐயமின்றி உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் அழுத்தமாக.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தாலும், மாவட்டத்திற்குள் செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் இ - பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் காவல்துறையும் அறிவித்துள்ளன. ஆனால், நேற்று எனது நண்பர் ஒருவர் கள்ளக்குறிச்சியில் புறப்பட்டு விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கடந்து சென்னைக்கு சென்றிருக்கிறார். இடையில் எந்த இடத்திலும் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்படவில்லையாம். சென்னையிலும் எந்த சாலையிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் அணிவகுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்னும் எத்தனை வாரங்கள் ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வராது என்று சொல்லும் ராமதாஸ்,
உயிரையும் துச்சமென மதித்து சேவை செய்யும் மருத்துவர்கள் தான் கடவுள்கள் - டாக்டர் ராமதாஸ்
ஊரடங்கு என்பது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர முடியாத நிலையை உருவாக்குவது தான். அத்தகைய ஊரடங்கை செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாக செயல்படுத்த விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது என தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்.
மேலும், கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.