தலித்துகளை விட குறைவான “கட்ஆப்”.. உயர்சாதியினருக்கு EWS இடஒதுக்கீட்டால் ரயில்வேயில் மேலும் வாய்ப்பு
சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினர் என்று வரையறுக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக ரயில் பணி தேர்வுகளில் பட்டியலின மக்களை விட உயர்சாதியினருக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண்களை இந்திய ரயில்வே தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து இருக்கிறது.
இந்தியாவில் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளால் கல்வி, வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக சாதி, மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நன்றாக படித்து உயர் பதவிகளில் இன்று அலங்கரித்து வருகிறார்கள். இந்த இடஒதுக்கீட்டை தொடக்கத்திலிருந்தே உயர்சாதியினர் எதிர்த்து வருகின்றனர்.

நிறைவேறிய சட்டம்
அதே சமயம் தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கோரினர். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக, விசிக வழக்கு
இந்த நிலையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவது, இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. திமுக, விடுதலை சிறுத்தை கட்களும் அரசியலமைப்பு சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இடமில்லை என வழக்கு தொடர்ந்தன.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது. அதில், 5 நீதிபதிகளில் பேர் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

எதிர்த்து வழக்கு
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக திமுக தரப்பில் இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது வெளியாகி உள்ள ரயில்வே தேர்வுகளுக்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் சர்ச்சையாகி இருக்கிறது.

ரயில்வே பணி தேர்வு
இந்திய ரயில்வே பணிகளுக்கான குரூப் டி தேர்வுகள் மூலமாக 1,03,769 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்து முடிந்தது. அடுத்த ஆண்டு இதற்கான உடல் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில்தான் சாதி வாரியாக கட் ஆப் மதிப்பெண்களை வெளியிட்டு உள்ளது இந்திய ரயில்வே தேர்வு வாரியம்.

குறைவான கட் ஆப் மதிப்பெண்
அதில், பட்டியலின மக்களை விட பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய EWS வகுப்பினருக்கு பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications