ஹாங்காங் சார்பில் களமிறங்கிய மதுரை வீரர்கள்; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவாரஸ்யம்
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் ஹாங்காங் சார்பில் இந்திய நாட்டை சேர்ந்த தாய்-மகன் என இருவர் களம் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் சர்வதேச செஸ் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்தது. அதன் அடிப்படையில் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 78 வயதான மூதாட்டியும் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் ஹாங்காங் தரப்பில் விளையாடி வருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட்.. இன்று ஒருநாள் ப்ரேக்.. கால்பந்தில் சாகசம் நிகழ்த்திய சர்வதேச செஸ் வீரர்கள்!
சாம்பியன்
ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங்கிற்காக இந்தியாவை சேர்ந்த 'சிகப்பியும்', அவரது மகன் 'தண்ணீர்மலையும்' விளையாடி வருகின்றனர். சிகப்பியின் கணவர் 'கண்ணப்பன்' ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார். மதுரையில் பிறந்த சிகப்பி, இளம் வயதிலேயே செஸ் கற்று மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதில் முதலிடம் பிடித்தவர். இவர் ஒரு காலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சாம்பியனாகவும் இருந்திருக்கிறார்.
வெள்ளி பதக்கம்
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் சிறு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். எனக்கு அதில் ஆர்வம் அதிகம். முன்பொரு காலத்தில் நான் தமிழ்நாட்டின் சார்பாக விளையாடி இருக்கிறேன். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினேன். இதில் எங்கள் பல்கலைக்கழகம் வெள்ளி வென்றது. மெட்ராஸ் பல்கலைக்கழகம் தங்கம் வென்றது" கூறியுள்ளார்.
ஹாங்காங்
இவர் ஒரு திறமையான செஸ் விளையாட்டு வீரர் என கிராண்ட்மாஸ்டர் மீனாட்சி, சிகப்பிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இப்படி விளையாடி வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சிகப்பி கணவர் கண்ணப்பனுடன் நைஜீரியா சென்றுவிட்டார். இது குறித்து கண்ணப்பன் கூறுகையில், "நாங்கள் ஐந்து ஆண்டுகள் நைஜீரியாவில் இருந்தோம், பின்னர் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்தோம்" என்று நினைவு கூர்ந்துள்ளார். தற்போது களத்தில் விளையாடி வரும் சிகப்பிக்கு இது இரண்டாவது ஒலிம்பியாட் போட்டியாகும். கடந்த 2016ல் அஜர்பைஜானில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் இவர் விளையாடி இருக்கிறார்.
களத்தில் மகன்
சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் நடப்பு ஒலிம்பியாட் போட்டி ஆட்டங்களில் 2 முறை வெற்றி பெற்று 1 ஆட்டத்தை டிரா செய்துள்ளார். சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள சிகப்பி, நீண்ட நாட்களுக்கு பின்னர் போட்டியில் நுழைவது சற்று கடினமாக இருந்ததையும் விளக்கியுள்ளார். மறுபுறம் 1,699 ELO மதிப்பீட்டில் ஒலிம்பியாட் போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார் சிகப்பியின் மகன் தண்ணீர்மலை.
மகிழ்ச்சி
தண்ணீர்மலைக்கு சிகப்பிதான் பயிற்சி கொடுத்து வருகிறார். பல்வேறு காரணங்களால் ஹாங்காங் சார்பாக சில வீரர்கள் விளையாட முடியாமல் போனதால் தற்போது சிகப்பி மற்றும் தண்ணீர்மலை ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இவர்கள் ஹாங்காங் செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளதால் இந்த வாய்ப்பு அவர்களுக்கு சாத்தியமாகியுள்ளது. எனவே எதிர் வரும் போட்டிகளில் ஏதோ ஒரு வீரர் இந்திய உடையணிந்து தமிழ் மொழியில் பேசினால் அவர் இந்தியாவுக்காக விளையாடுகிறார் என நினைத்துக்கொள்ளாதீர்கள் மக்களே. எப்படியாயினும் விளையாட்டுக்கு எல்லை கோடுகள் கிடையாதுதானே?