அதிர வைத்த பாஜக ஆடியோ விவகாரம்! மகளிர் ஆணையம் விசாரணை நடத்தாதா? குறுக்கே வந்த மக்கள் நீதி மய்யம்!
சென்னை : பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா - டெய்சி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக பெண் நிர்வாகி தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன்..? என மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், மற்றொரு விவகாரத்தில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ரூ.1000 மழை நிவாரணம்.. அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.. மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் வழங்கல்
டெய்சி சரண் -சூர்யா சிவா
இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம்
இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகி தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன்..? என மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாலர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," உள்கட்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேசிய தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சி விரோத செயல்பாடுகளுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
டெய்சி சரண்
அதுவே சிறுபான்மையினர் அணி தலைவியான மருத்துவர் திருமதி. டெய்சி சரண் அவர்கள் தொலைபேசியில் பேசிய போது அச்சிலேற்ற முடியாத, தகாத வார்த்தைகளால், தரம் தாழ்ந்து சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் (7நாட்கள்) வரை கட்சி நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க தடை விதித்துள்ளது என மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
பாதுகாப்பற்ற நிலை
ஏனெனில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதற்காக ஒரு பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய மாநில கட்சித் தலைமை சக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, சமூக விரோதி போல கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்காமல் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வெறும் 7நாட்களுக்கு மட்டும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையோடு தமிழக பாஜக செயல்பட்டு வருவதையும், தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
மகளிர் ஆணையம்
கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளின் பாதுகாப்பையே கட்சியின் தலைமையால் உறுதி செய்ய முடியாத போது தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழக பெண்களுக்கு பாஜக எந்த வகையில் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்..? மேலும் எது, எதற்கெல்லாமோ பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியான உடன் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் "தேசிய மகளிர் ஆணையம்", மருத்துவரும், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவியுமான திருமதி. டெய்சி சரண் அவர்கள் தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தில் இதுவரை தானாக முன் வந்து விசாரணை நடத்த முன் வராதது ஏன்..? ஒருவேளை மேலே ஆட்சி புரிபவர்களின் கடைக்கண் பார்வை (அனுமதி) கிடைத்தால் தான் மகளிர் ஆணையம் கூட செயல்படுமோ..? என்னவோ..?" என கூறியுள்ளார்.