அச்சுறுத்தும் மாண்டஸ்: புயலின் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?
சென்னை: மாண்டஸ் புயல் தற்போது தெற்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விவரங்கள் தரப்பட்டுள்ளன.
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி குறைந்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டு இருந்தது. இதையடுத்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக வலுவானது.
வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 3% குறைவு..டிச.8க்கு மேல் அதி கனமழை ஆட்டம் ஆரம்பம்
மாண்டஸ் புயல்
மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த தீவிர புயல், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகரும் வேகம் 15 கிலோ மீட்டரில் இருந்து 12 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று
மாண்டஸ் புயல் இன்று மீண்டும் புயலாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது.அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
பயணங்களை தவிர்க்க வேண்டும்
திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை நேரங்களில் மழை தீவிரமாக இருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையக் கடக்கக்கூடிய நேரத்தில் அதாவது இன்று இரவு பொதுமக்கள் அவசியம் இல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும்.
என்னவெல்லாம் செய்யக்கூடாது
காய்கறி, பால், போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் போது மக்களும், மீனவர்களும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
செல்போனை முழுவதுமாக சார்ஜ்
* வதந்திகளை புறக்கணிக்க வேண்டும், அமைதிகாப்பதோடு அச்சம் தவிர்த்து இருக்க வேண்டும்.
* செல்போனை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிகம் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை மெசேஜ் செய்யலாம்.
* வானிலை தொடர்பான செய்திகளுக்கு வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள்களை பின் தொடரலாம்.
* வாட்ஸ் அப்பில் உள்ள தேவையற்ற பார்வார்டு மெசேஜ்களை நம்பக் கூடாது. முக்கியமான டாக்குமண்ட்கள், பொருட்களை தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை..
* பாதுகாப்பு மற்றும் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய பொருட்களுடன் அவசரகால பெட்டி ஒன்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
* கால்நடைகளையும் செல்லபிராணிகள் அவற்றுக்கு உரிய இடத்தில் பாதுகப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
* மீனவர்கள் கூடுதல் பேட்டரிகளுடன் ஒரு வானொலிப் பெட்டியை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது.
* படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும். புயல் தாக்கும் போது மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை அணைத்து வைக்க வேண்டும்.
உடைந்த மின் கம்பங்கள்..
* கதவு ஜன்னல்களை அடைத்து வைக்க வேண்டும். வீடு பாதுகாப்பானது இல்லை என்றால் புயலுக்கு முன் வெளியேறிவிட வேண்டும்.
* வானொலியை கேட்கவும் அதிகாரப்பூர்வ நம்பிக்கையை மட்டும் நம்பவும்* கொதிக்க வைத்த மற்றும் குளோரின் கலந்த நீரை அருந்தலாம்.
* சேதம் அடைந்த கட்டடங்களுக்குள் நுழையக் கூடாது.
* உடைந்த மின் கம்பங்கள், அறுந்த, சிதைந்த வயர்கள், கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும்.