மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த "மாஸ்டர்" பிளான்.. சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகும் "தளபதி"
அரசியல் பயணம் குறித்து மாஸ்டர் பிளான் வைத்துள்ளாராம் தளபதி நடிகர். அதற்கான நேரம் காலம் பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்
சென்னை: பிறந்தநாளில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலுக்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம் தளபதி நடிகர்.
Recommended Video
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை.
நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, கொடி அறிமுகம் செய்து வழிநடத்தி வருகிறார்.

விஜய் அரசியல் பயணம்
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளவர் விஜய். தமிழ்நாட்டில் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது.

அரசியல் வசனங்கள்
கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்தார் விஜய். தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளித்தார் விஜய். 51 பேர் வெற்றி பெற்று விஜய் கட்சியின் அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர். வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்தார் விஜய்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் விஜய் ரசிகர்கள்
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். மழை, வெள்ளப் பாதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தனர். அதன் பலனை நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அறுவடை செய்தனர். கணிசமான அளவில் வெற்றி பெற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இப்போதைக்கு சைலண்ட்
உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வரும் பிறந்தநாளில் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அப்படி எல்லாம் அறிவிக்கப்போவதில்லையாம் விஜய். ரசிகர்களை சந்திப்பதுதான் இப்போதைக்கு பிளானாம்.

மாஸ்டர் பிளான்
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் அடுத்த கட்ட பிளானாம். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இப்போதிருந்தே தயாராக சொல்லியிருக்கிறாராம். பூத் கமிட்டி தொடங்கி வார்டு வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் மாஸ்டர் நடிகரின் திட்டமாம். எது எப்படியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தளபதி பூர்த்தி செய்தால் சரிதான்.












Click it and Unblock the Notifications