Newsmakers 2018: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அடுத்தடுத்து கான்செப்ட் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
இந்த வருடத்தின் மறக்க முடியாத நபர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சென்னை: நாட்டு மக்களுக்கு அடிக்கடி ஷாக் கொடுத்து உறைய வைப்பவர்களில் முக்கியமானவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதனால்தான் இந்த 2018-ம் வருடத்தில் பேசப்படும் நபர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
திமுக, அதிமுகவை கட்டிக்காத்த தலைவர்கள் கருணாநிதி ஆகட்டும், எம்ஜிஆர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும்... சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் குறிப்பே எடுத்து வைத்து கொள்ளாமல் அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் பேசி அசத்தி விடுவார்கள்.
அதேபோல பொதுக்கூட்டங்கள் என்றாலும் இவர்களது பேச்சில் ஒரு பிசுறு தட்டாது. சரளமாக பேசினாலும் தவறில்லாமலும், மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய வகையிலும் பேசினார்கள்.

மக்களுக்கு உதறல்
ஆனால் தற்போதுள்ள "தலைவர்கள்" மேடையில் பேச ஆரம்பித்தாலே உளறல்தான் கொப்பளிக்கிறது. குறிப்பாக அமைச்சர் திண்டுக்கல் பேசபோகிறார் என்றாலே எதை சொல்லி மக்களை டென்ஷன் ஆக்க போகிறாரோ என்று உள்ளுக்குள் இனம்புரியாத உதறல் வந்துவிடுகிறது.

அம்மா இட்லி
அமைச்சராக பதவியேற்ற போது இவரது பேச்சு பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் "அம்மா இட்லி சாப்பிடவில்லை, எல்லாமே டூப்பு" என்று சொன்னபோதுதான் மக்கள் பார்வை இவர் மீது திரும்பியது. இதையடுத்து "ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம்தான் இருக்கிறது" என்று திடீரென அடித்த பல்டி பேச்சால் அரசியல்வாதிகளும் ஆடிப்போனார்கள்.

நரசிம்மராவ்
இதெல்லாம்கூட எதிர்தரப்பினர் மீதான காழ்ப்புணர்ச்சி என்றே வைத்து கொண்டாலும், பொதுவான விஷயங்களை பேசும்போது கூட இப்படித்தான் அமைச்சர் மேடைகளில் பேசினார். "முன்னாள் பிரதமரும், அதுவும் இறந்து போன நரசிம்மராவுடன், துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என்றார்.

விஞ்ஞானம்
மற்றொரு கூட்டம் ஒன்றில், "யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்" காலங்காலமாக உதிர்க்கப்பட்ட பொன் மொழியை திருப்பி போட்டு அதிர்ச்சி தந்தார். சில சமயம் விஞ்ஞான ரீதியாகவும் இவர் பேச ஆரம்பித்து விட்டார்.

மண்டை காய்கிறது
"கஜா புயல் பாதித்த பகுதிகளில் கரண்ட் கம்பங்களை விமானம் மூலம் நடுங்கள், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான், விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, நாம விமானம் மூலம் கரண்ட் கம்பங்களை நட முடியாதா என்று கேட்டார். இது விஷயமாக அப்போது மண்டையை உடைத்து கொண்டவர்கள் இன்னும் தெளியவில்லை.

கதி கலங்கும் பேச்சு
இப்படி பல்வேறு தருணங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி மக்களை கதி கலங்க வைத்துள்ளார். அமைச்சர்கள் என்றாலே சீரியஸ் சமாச்சாரம் என்பது போய், கேலி, கிண்டல்கள், மீம்ஸ்கள் போன்றவற்றை உருவாக்கும் அளவுக்கு மக்களை கொண்டு வந்துவிட்டதில் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுக்கு நிறையவே பொறுப்பு உள்ளது. அதனால்தான் 2018-ல் மறக்க முடியாத நபர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவராக இடம் பிடிக்கிறார்.
{document1}












Click it and Unblock the Notifications