விழுந்து விழுந்து சிரித்த துரை.. “முனுசாமி குவாரிக்கு சீல் வச்சதே நாங்கதான்” - ஆடியோ பற்றி விளக்கம்!
சென்னை : கே.பி.முனுசாமிக்கு திமுக அரசு உதவி செய்வதாக பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ பற்றி அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
கே.பி.முனுசாமி திமுக அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், குவாரி ஏலம் அவருக்கு கிடைத்துள்ளது, இதனால் அவர் ஸ்டாலினை விமர்சிப்பதே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கே.பி.முனுசாமி அதிக தொகைக்கு டெண்டர் எடுத்து குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளார். குவாரி உரிமம் வழங்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

பரபர ஆடியோ
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவரான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில் பொன்னையன், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பற்றிய ரகசியங்களை அதிமுக நிர்வாகி ஒருவருடன் பேசுவதாக உள்ளது.

கே.பி.முனுசாமிக்கு உதவும் அமைச்சர்
அந்த ஆடியோவில் கே.பி.முனுசாமி பற்றிய பல விஷயங்கள் பேசப்படுகின்றன. கே.பி.முனிசாமி ஸ்டாலினைத் திட்டுவதை நிறுத்திவிட்டார். கே.பி.முனுசாமியின் மகன் திமுக அமைச்சரின் உதவியால் பெட்ரோல் பங்க் வாங்கியது எல்லாம் சாதாரணம். கே.பி.முனுசாமி, துரைமுருகனை பிடித்து குவாரி உரிமம் வாங்கியுள்ளார். குவாரி எக்ஸ்போர்ட் மூலம் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். பணத்தை பாதுகாக்க இப்படி ஆடுகிறார். அவர் ஸ்டாலின் தயவுக்காக, தி.மு.கவை திட்டுவதில்லை என பொன்னையன் பேசுவதாக அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன்
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பலமாகச் சிரித்தபடி பேசிய துரைமுருகன், "கே.பி.முனுசாமியின் குவாரிக்கு ஏற்கனவே அரசு சீல் வைத்துள்ளது. புதிதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி கே.பி.முனுசாமி குவாரி எடுத்திருக்கிறார். குவாரி உரிமம் வழங்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

பொன்னையன் ஒரு மாதிரி
மேலும், "பொன்னையன் முன்பு போல இல்லை, கொஞ்சம் ஒரு மாதிரி பேசுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதாக கூறப்படும் விமர்சனங்களில் சிறிதும் உண்மை இல்லை. அரசியலில் இது போன்று குற்றம்சாட்டுவது வழக்கம்தான்." எனத் தெரிவித்துள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications