விவசாயிகள் கவனத்திற்கு! நவம்பர் 1ஆம் தேதி நீங்க செய்ய வேண்டியது இது தான்! அலர்ட் செய்யும் அமைச்சர்!
சென்னை: நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அரசின் வேளாண்மைத் துறை திட்டங்கள் பற்றி விளக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆகையால் கிராம சபைக் கூட்டத்தை விவசாயிகள் எக்காரணம் கொண்டும் தவிர்த்து விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உள்ளாட்சிகள் தினம்
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளதுதமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

வேளாண்மைத் துறை
கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பை உயர்த்தும் திட்டம், சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தைகளை வலுப்படுத்தும் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அன்று, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

கிராம சபைக் கூட்டம்
நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் - உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications