"சேர் எங்க?" கோபமாகி கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்.. தீயாய்ப் பரவும் வீடியோ!
சென்னை : அமர்வதற்கு நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் கோபமடைந்து, நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் கல்லை எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவள்ளூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் நாசர், அமர்வதற்கு நாற்காலி கொண்டு வராததால் டென்ஷனாகி, கல்லை விட்டு எறிந்துள்ளார்.

திருவள்ளூரில் பொதுக்கூட்டம்
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன. திருவள்ளுரில் உள்ள ஐ.சி.எம்.ஆர் கலைஞர் திடலில்
நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

அமைச்சர் ஆய்வு
இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் அமர்வதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலி எடுத்து வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோபமான அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கல்லை எடுத்து எறிந்தார்.

கல் வீசி எறிந்த நாசர்
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், "சேர் எடுத்துட்டு வா போ.. ஒரு சேர் எடுத்துட்டு வர்ற.. யார்ட்ட" என்று பேசியபடி அமைச்சர் நாசர் ஒரு கல்லை தூக்கி எறியும் காட்சி பதிவாகியுள்ளது. அங்கு இருந்தவர்கள் அமைச்சர் நாசரின் இந்தச் செயலை பார்த்து சிரித்துள்ளனர்.

சர்ச்சை
அமைச்சர் நாசர் கல்லை எடுத்து எறியும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. திமுக அமைச்சர்கள் சிலர் பேசியது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது அமைச்சர் எஸ்.எம். நாசரின் செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications