ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்ல முடியாது.. விரைவில் முற்றுப்புள்ளி.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஊரடங்கால் கொரோனா குறைகிறது. ஆனால் அதற்காக அதை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் மாநில மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் வீடியோவில் பேசுகையில் அனைவருக்கும் வணக்கம், எல்லோரும் பாதுகாப்பாக இருக்கீங்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் இன்னொருவருக்கு பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மேல் பரவாமல் இருக்க ஒவ்வொருத்தரும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அது போல் நீங்களும் மற்றவங்களுக்கு பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனாவாவை ஒழிக்க முடியும். கடந்த மே 24 ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள்.. அவை என்னென்ன?.. இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தளர்வுகளற்ற ஊரடங்கு
மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை எட்டிய நிலையில் தற்போது 2ஆயிரமாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக குறைந்துவிடும்.
மேற்கு மண்டலங்கள்
கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் கடந்த வாரத்தில் அதிகமாக இருந்தது. அதுவும் கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. எனவே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
காய்கறிகள்
மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை சாமான்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்படவுள்ளது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முழு ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ 2 ஆயிரம் கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த கட்டமாக ரூ 2 ஆயிரம் வழங்கப்படும்.
அபிஜித் பானர்ஜி
இதை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியும் பாராட்டியுள்ளார். இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகள் என 3 வார காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.
படுக்கைகள்
இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுப்பாடு என்ற நிலை இப்போது இல்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். இந்த அளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை.
|
வளமான தமிழகம்
ஒரு நாளைக்கு 1.70 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அளவுக்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை. மக்களை காக்கும் மகத்தான பணிகளில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். கொரோனாவை விரைவில் வீழ்த்திவிட்டு பல்வேறு துறைகளிலும் புதிய நடவடிக்கைகள் எடுத்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். நமக்கான வளமான தமிழகத்தை அமைப்போம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.