அரசியல் சாணக்கியராகும் கமல்.. மக்கள் நீதி மய்யம் 2.O-க்கு அட்டகாசமான வியூகம் ரெடி.. பரபர பின்னணி
சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ள நிலையில், வரும் நாட்களில் கட்சியை வலுப்படுத்தப் பல அதிரடி வியூகங்களைக் கமல் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுமையாக கம்பேக் தரப்போகும் மக்கள் நீதி மய்யம் 2.O தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் வேற மாதிரி இருக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆளும்கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவால் 70க்கும் குறைவான இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஆனால், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகளால் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை.
பெகாசஸ்.. இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது.. நாடாளுமன்ற வளாகத்தில் டி.ஆர்.பாலு ஆவேசம்
சட்டசபைத் தேர்தல்
குறிப்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்முறையாகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. இதனால் அக்கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொண்டது. இருப்பினும், வெறும் 2.62% வாக்குகளை மட்டுமே மக்கள் நீதி மய்யத்தால் பெற முடிந்தது. ஒரு இடத்திலும்கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை.
சிதறிய மநீம
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் தலைவர் கமல்கூட கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுகணமே மக்கள் நீதி மய்யம் சிதறத் தொடங்கியது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதலில் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். அதன் பிறகு கட்சியிலிருந்தே விலக்கிக் கொண்டனர். மாநில பொறுப்பாளர்கள் மட்டும் விலகவில்லை, மாவட்ட அளவிலும் கூட பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.
திமுகவில் ஐக்கியம்
குறிப்பாக, கமலுக்கு அடுத்து மக்கள் நீதி மய்யத்தில் பவர்புல்லான இடத்திலிருந்த மகேந்திரனும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினார். அத்தோடு நில்லாமல் மக்கள் நீதி மய்யம் கார்ப்ரேட் கம்பெனி போலச் செயல்படுகிறது, கட்சி நிர்வாகிகளின் குரலுக்கு மதிப்பளிப்பதில்லை என்று வரிசையாகக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும், அப்படியே, அவர் திமுகவில் ஐக்கியமானார். அவருடன் மதுரவாயல் மநீம வேட்பாளராக போட்டியிட்ட பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார்.
மகேந்திரன்
கொங்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள திமுகவுக்கு மகேந்திரனின் வருகை நிச்சயம் பலம் தான். ஆனால், மக்கள் நீதி மய்யத்திற்கு இது பெரிய இழப்பு. கோவையில் டாக்டர் மகேந்திரனுக்கு என தனிச்செல்வாக்கு இருந்தது. அதனால் மநீம சார்பில் போட்டியிட்டு 2019 மக்களவை தேர்தலிலேயே சுமார் 1.5 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. அவருடன் கோவை மாவட்டத்தில் இருந்து மக்கள் நீதி மைய நிர்வாகிகள் அப்படியே கூண்டோடு ராஜினாமா செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கமல் அமைதி
இப்படி மக்கள் நீதி மய்யத்தின் பல முக்கிய நிர்வாகிகளும் மாற்றுக்கட்சியில் இணைவதால் அப்செட்டில் உள்ளார் கமல். இருப்பினும், கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தோல்வியின்போது கட்சியிலிருந்து விலகுபவர்கள் யாரையும் தடுக்கவும் அவர் விரும்பவில்லையாம். அதனால்தான் முக்கிய நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகும்போதும் அவர் அமைதியாகவே இருந்தார்.
அதிரடி வியூகம்
இப்போது அதிருப்தியாளர்கள் யாரும் கட்சியில் இல்லை என்பதால், அடுத்தகட்டமாக மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்தப் பல அதிரடி வியூகங்களையும் அவர் வகுத்துள்ளார். இடையில் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியான கமல், இன்னும் சில நாட்களில் கோவை தெற்கு தொகுதிக்குச் சென்று தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். அப்போது கட்சியை வலுப்படுத்துவது குறித்துப் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் குறி
இப்போது அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலும் அமமுக அதிருப்தியாளர்கள் அதிமுகவிலும், அதிமுக அதிருப்தியாளர்கள் திமுகவிலும் ஐக்கியமாகி வருகின்றனர். இவர்கள்தான் கமலின் முக்கிய குறி. அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களையும், தேர்ந்த நிர்வாகிகளையும் மக்கள் நீதி மய்யத்திற்கு இழுக்கக் கமல் சூப்பர் ஸ்கெட்ச் போட்டுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மக்கள் நீதி மய்யம் 2.O
இந்த முயற்சியில் மட்டும் கமல் வென்றுவிட்டால், மக்கள் நீதி மய்யம் 2.Oஇன் வளர்ச்சி வேற மாதிரி இருக்கும். திரைத்துறையில் தொட்டத்தையெல்லாம் வெற்றியாக மாற்றும் கமலுக்கு, அரசியல் முதலில் தோல்வியைப் பரிசாக அளித்துள்ளது. ஆனால், இந்தத் தோல்வியிலிருந்து கமல் கொடுக்கும் கம்பேக் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் கமல்ஹாசனின் ரசிகர்கள்..!