உசிலம்பட்டியில் வந்த சிக்கல்! மாணவர்களுக்கு ஆபத்து நேரிடுமோ! கொந்தளித்த மநீம.. பறந்த அறிக்கை!
சென்னை : தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை எனவும், பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம்உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிக்குண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பயத்துடனே வந்து சென்றனர். தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆஹா.. புரட்டிப்போடும் புயல்.. தூத்துக்குடியில் 30 அடி உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியடைந்த மக்கள்
பள்ளி கட்டிடம்
இந்த பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் உசிலம்பட்டி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள அல்லிகுண்டம் விலக்கு பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மநீம
இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை எனவும், பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில்,"மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கண்டனம்
இதைக் கண்டித்தும், புதிய கட்டிடம் கட்டித்தரக் கோரியும் வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.மாநிலம் முழுவதும் ஏராளமான அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இந்த லட்சணத்தில்தான் உள்ளன. கல்வித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.37000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், பள்ளிக் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்தும், இடிந்துவிழும் நிலையிலும் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஆபத்து நேரிடுமோ
தமிழகம் முழுவதும் மழை வலுத்துள்ள சூழலில், சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, உடனடியாக பள்ளிக் கட்டிடங்களைச் சீரமைக்கவும், புதிய கட்டிடங்களைக் கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.