ஒரே நாடு.. ஒரே சார்ஜர்! மத்திய அரசின் ஓஹோ பிளான்.. “ஓகே” சொன்ன நிறுவனங்கள்
சென்னை: அனைத்து வகையான செல்போன்கள், லேப்டாபுகள் உள்ளிட்ட மின்னணு கருவிகளுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் பின்களை பயன்படுத்தும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தில் எலெக்டிரானிக் நிறுவனம் சம்மதம் தெரிவித்து உள்ளன.
அனைத்து வகையான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட எலெக்டிரானிக் கருவிகளுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்டுகளை பயன்படுத்துவது தொடர்பாக துணை அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்து இருக்கிறது.
ஒரே சார்ஜர் போர்ட் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இந்த குழு ஆராயும். மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சக செயலாளர் ரோகித் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
போட்றா வெடிய.. அதென்ன சார்ஜர் கொடுக்காம செல்போன் சேல்ஸ்? ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.164 கோடி அபராதம்
நுகர்வோர் நலத்துறை கூட்டம்
MAIT, FICCI, CII உள்ளிட்ட அமைப்புகளின் மூத்த நிர்வாகிகள், கான்பூர் ஐஐடி, ஐஐடி (பிஎச்யு) வாரணாசியின் நிர்வாகிகள், மத்திய சுற்றுச்சூழல் துறை உட்பட மத்திய அரசின் பல துறை அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள் என பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நிறுவனங்கள் சம்மதம்
ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தின் ஒரு பகுதியை அறிமுகம் செய்வதற்கு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், அதையே தொழிற்சாலைகளில் அமல்படுத்தவும், ஒரே மாதிரியாக வாடிக்கையாளர்களை அதற்கு பழக்கப்படுத்தவும் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
டைப் சி
இந்த கூட்டத்தில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகள் போன்ற எலெக்டிரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்டாக தற்போது பெரும்பாலான ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் டைப் சி சார்ஜர்களையே பொதுவானதாக மாற்ற பெரும்பாலான நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.
மின் கழிவுகள்
அதேபோல் புதிதாக வரும் ஸ்மார்ட்போன்களுக்கு வேறு சார்ஜிங் போர்டுகளை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர், "நுகர்வோர் நலன் கருதியும், மின் கழிவுகளை தடுக்கும் விதமாகவும், ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர வேண்டும்." என கூட்டத்தில் துறை செயலாளர் கூறி உள்ளார்.
துணை அமைப்பு
புதிதாக அமைக்கப்படும் துணை அமைப்பில், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து இந்த அமைப்பு ஆய்வு செய்யும் எனவும் நுகர்வோர் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மோடியின் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (Lifestyle for Environment - LiFE) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஒரே சார்ஜர் திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. பருவ நிலை மாற்றத்துக்கான ஐ.நா. கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.