நளினி, ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்படுவார்களா? - நாளை தீர்ப்பு.. வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
சென்னை: தங்களை விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
ஆளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
6 வருசத்துல ஒரே ஒரு முறைதான்.. எங்க கஷ்டத்தை எப்படி சொல்றது? - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 வருடங்களுக்கும் மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்து வந்தனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் செய்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
நளினி மனு
இந்நிலையில், ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
நளினி தரப்பு வாதம்
நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு வாதம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதேநேரம், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை குறித்து உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என வாதிட்டது. இதையடுத்து விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை தீர்ப்பு
இந்நிலையில் 31 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.