புள்ளி விவரம் தெரியுமா மேடம்?.. குஷ்பு செய்த ஒரு ட்வீட்.. கொதித்து போன நெட்டிசன்ஸ்.. சரமாரி பதில்!
சென்னை: பாஜக உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு செய்த ட்வீட் ஒன்றிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் மீண்டும் கடுமையாக வைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த திங்கள் கிழமை முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு தமிழ்நாட்டில் மேலும் 3 உயிர்களை பலி கொண்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத அச்சப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் கனிமொழி என்ற மாணவியும் பின்னர் சௌந்தர்யா என்று மாணவியும் தற்கொலை செய்து கொண்டனர்.
திமுக சங்கியாகிவிட்டதா என்ன?.. வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ட்வீட்!
நீட்
நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் இப்படி அடுத்தடுத்து 3 மாணவ மாணவிகள் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக அரசு விலக்கு பெற்றுத்தரும் என்று ஆளும் திமுக தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளது. ஆனால் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டில் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்று பாஜக தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.
குஷ்பு
இந்த நிலையில்தான் பாஜக உறுப்பினர் நடிகர் குஷ்பு நீட் தேர்வு குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், மருத்துவம் என்பது பலருடைய கனவு என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடைய கனவுகள் கண்டிப்பாக நிறைவேறும். நீட் தேர்வு மூலம் முறையாக தகுதியான மாணவர்கள் மாணவிகள் தங்கள் கனவுகளை எட்ட முடியும். தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. வாழ்க்கைதான் முக்கியம், என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
விமர்சனம்
இதில் குஷ்பு குறிப்பிட்டு இருக்கும் "நீட் தேர்வு மூலம் முறையாக தகுதியான மாணவர்கள் மாணவிகள் தங்கள் கனவுகளை எட்ட முடியும். " என்ற வரி பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. குஷ்பு எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறார். புள்ளி விவரங்கள் வேறு மாதிரி சொல்லும் போது எதன் அடிப்படையில் குஷ்பு நல்ல தகுதியான மாணவர்கள் மருத்துவர் ஆவதாக சொல்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
புள்ளி விவரம்
இன்னும் சிலர் புள்ளி விவரங்களை வெளியிட்டு, தமிழ் மாணவர்கள், தாய் மொழியில் பயின்றவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி உள்ளனர். சிபிஎஸ்இ முறையில் படித்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்து உள்ளது. இதைத்தான் தகுதி என்று குறிப்பிடுகிறீர்களாக என்று டேட்டாவோடு விளக்கம் கொடுத்து உள்ளனர்.
எப்படி?
வடமாநிலங்களில் நீட் தேர்வுகளில் பலர் குளறுபடி செய்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் எல்லாம் தகுதியான நபர்களோ என்று நெட்டிசன்கள் குஷ்புவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். எப்படி வட மாநிலத்தில் 35 லட்சத்திற்கு question பேப்பர் sales நடந்து இருக்கு அதே மாதிரியா அக்கா.. என்று கேள்வி கேட்டு குஷ்புவை விமர்சனம் செய்து உள்ளனர்.