கார்ப்பரேட் இளைஞர்களையும் கழனி பக்கம் திருப்பிய சாதனையாளர்.. நெல் ஜெயராமன்
விதை நெல்லை இறுதிவரை நேசித்து கொண்டே இருந்தவர் நெல் ஜெயராமன்.
Recommended Video

சென்னை: அது என்ன பாரம்பரிய நெல் திருவிழா? இதனை ஏன் நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நடத்தினார்?
2003-ல் நம்மாழ்வார் ஒரு நடைபயணம் மேற்கொண்டார். அந்த நடைபயணத்தில் ஜெயராமனும் கலந்து கொண்டார். அப்போது சில விவசாயிகள் நம்மாழ்வாரை சந்திக்க வந்தனர்.
கையில் 7 பாரம்பரிய நெல்விதைகளை வைத்திருந்தனர். இதை நம்மாழ்வாரிடம் கொடுத்து, இதை "நீங்கதான் ஐயா மீட்டு தரணும்" என்று சொன்னார்கள்.

மீட்க கிளம்பினார்
அந்த நெல்விதைகளை வாங்கிய நம்மாழ்வார் பக்கத்தில் இருந்த ஜெயராமனிடம் ஒப்படைத்தார். கூடவே, விவசாயிகளிடம் அந்த நெல்விதைகளை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் நெல்லை மீட்டெடுக்கும் பயணம் ஆரம்பமானது.

விளைச்சல்
அந்த 7 வகை விதைநெல்லை வாங்கி கொண்ட ஜெயராமன், முதல்கட்டமாக அதை வைத்து 2004-2005ம் வருஷம் விவசாயம் செய்தார். விளைச்சல் பலன் தந்தது. உடனே கூடுதலான விதைநெல்லை மறு உற்பத்தி செய்தார். சந்தோஷம் பீறிட்டது. இந்த விதை நெல்லை விதைத்தால் இவ்வளவு விளைச்சல் என்பதை கண்முன்னாலேயே பார்த்தார் ஜெயராமன்.

பண்ணை வீடு
இதற்காகவே நெல் திருவிழாவை 2006 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டார். இந்த திருவிழா எப்படி என்றால், வருஷா வருஷம் மே மாசம் 30, 31-ம் தேதிகளில்தான் நடத்தப்படும். அதன்படி முதல்திருவிழாவை எடுத்தவுடன் பெரிய அளவில் செய்யாமல் அவருக்கு தெரிஞ்ச ஒரு விவசாயியின் பண்ணை வீட்டில் எளிய முறையில் நடத்தினார். இதில் 147 விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

இயற்கை விவசாயம்
அந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் கொடுக்கப்படும். அதை அவர்கள் வாங்கி கொண்டு தங்கள் வயல்களில் விளைவித்து அவற்றை பரவச் செய்ய வேண்டும். அதற்கு முறையான இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். பிறகு அடுத்த வருஷம் இதே திருவிழாவுக்கு வரும்போது, விளைந்த நெல்லிலிருந்து 4 கிலோ விதை நெல்லை திருப்பி ஜெயராமனிடமே தரவேண்டும். இதுதான் உறுதிமொழி.

கார்ப்பரேட் இளைஞர்கள்
அதன்படியே விவசாயிகள் வருஷா வருஷம் வந்த 2 கிலோ விதை நெல்லை கொண்டுபோய் விதைச்சு மறுவருஷம் 4 கிலோ விதை நெல்லை கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். இதன்மூலமாக 2 நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று, 147 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருவிழாவில் இப்போது 5 ஆயிரத்துக்கும் மேலான விவசாயிகள் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் போன வருஷம் நடந்த திருவிழாவில் ஐடி உள்பட பல கார்ப்பரேட் ஆபீசில் வேலை பார்க்கும் இளைஞர்கள் நிறைய பேர் கலந்துகொண்டார்கள். இவர்களை பார்த்ததும் அதிக அளவு சந்தோஷப்பட்டது ஜெயராமன்தான்.

தனித்தனி விழா
இரண்டாவது விஷயம், பல்லாயிரக்கணக்கான விவசாயிங்க விதைநெல்லை வாங்கி விவசாயம் செய்து பயனடைந்து இருக்காங்க. அது மட்டும் இல்லாத ஏராளமான விவசாயிகள் தனித்தனியாக அவங்கவங்க கிராமங்களில் விதை நெல் திருவிழாவை நடத்திட்டு வருகிறார்கள்.

169 வகை
விளைவு... 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணமே ஜெயராமன்தான். இப்படி நாம் மறந்து போன பாரம்பரிய நெல்லை, நம்மிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டு இன்று மொத்தமாகவே சென்றுவிட்டார் சாதாரண ஜெயராமனாக இருந்து உயர்ந்த "நெல் ஜெயராமன்"












Click it and Unblock the Notifications