கேரளாவில் சிக்கிய ராக்கெட் ராஜா! தண்ணி காட்டிய ரவுடியை ’ஸ்கெட்ச்’ போட்டு மடக்கிய நெல்லை போலீஸ்!
சென்னை : தென் மாவட்டங்களில் கொலை கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களின் காரணமாக காவல்துறையால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிதடி, கொலை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருபவர் ராக்கெட் ராஜா.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆணைகுடியை சேர்ந்த இவர் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரபல ரவுடியாக வலம் வருகிறார். நெல்லை மாவட்டத்தில் நடந்த பல சாதிய கலவரங்களில் முக்கிய குற்றவாளியாக இவர் இருக்கிறார்.

ராக்கெட் ராஜா
நெல்லையில் மிகவும் பிரபலமான கராத்தே செல்வின் என்பவரிடம் சீடராக சேர்ந்து தனது ரௌடி வாழ்க்கையை தொடங்கிய ராக்கெட் ராஜா நெல்லையில் அவருக்கு அடுத்தபடியாக மிகப் பிரபலமாக விளங்கிய வெங்கடேச பண்ணையாரோடு கரம் கோர்த்தார். திமுக ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் என்கவுண்டரில் பலியானதற்கு பிறகு அவரது தம்பியான சுபாஷ் பண்ணையாருடன் கரம் கோர்த்து ரவுடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராக்கெட் லாஞ்சர்கள்
எந்தவிதமான கட்டப்பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி கொலையாக இருந்தாலும் சரி சட்டவிரோத செயல்களை ராக்கெட் வேகத்தில் செய்து முடிப்பதன் காரணமாக இவருக்கு ராக்கெட் ராஜா என்ற அடைமொழி அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு இவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது ஏகே-47 துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் நெருக்கடியில் இருந்து தப்பிக்கொள்ள நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை தொடங்கியதோடு தமிழக முழுவதும் தனது ரவுடி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

அட்டூழியம் அதிகரிப்பு
இவர் மீது பல வழக்குகள் இருந்தாலும் பெரும்பாலானவற்றில் இருந்து ராக்கெட் ராஜா விடுதலையான நிலையில் 2017 ஆம் ஆண்டு பேராசிரியர் செந்தில் குமார் என்பவரது கொலை வழக்கு, முன்னால் எம் பி சசிகலா புஷ்பா வீட்டுப் பணிப்பெண்களை மிரட்டிய வழக்கு, நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வெளியே வந்த ராக்கெட் ராஜா மீண்டும் தலைமறைவானார். அப்போதிருந்து தற்போது வரை பல சட்டவிரோத செயல்களை திரை மறைவில் இருந்து செய்து வருவதாக புகார் இருந்தது. குறிப்பாக ராக்கெட் ராஜாவின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகள் பலரையும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் கைது
இதை அடுத்து பழைய வழக்குகளை தூசு தட்டிய நெல்லை போலீசார் ராக்கெட் ராஜாவை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர். ஆனால் அவரை கைது செய்வது அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை. தொடர்ந்து பல்வேறு வழிகளில் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. கண்காணிப்பை தீவிர படுத்திய போலீசார் ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் அவரை இன்று சுற்றி வளைத்து நெல்லை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் நெல்லைக்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது












Click it and Unblock the Notifications