திமுக எம்பியாகும் ராஜேஷ்குமார்.. ம்க்கும் 1 வருஷம் கூட இல்லையா?.. இதுக்குத்தான் இவ்வளவு போராட்டமா?
சென்னை: திமுக சார்பாக ராஜ்ய சபா எம்பியாகும் ராஜேஷ்குமார் ஒரு வருடம் கூட முழுமையாக அந்த பதவியில் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பதவிக்காலம் அதற்குள் முடிவடைந்துவிடும்.
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவிற்கு திமுக சார்பாக மேலும் இரண்டு எம்பிக்கள் தேர்வாக உள்ளனர். ஏற்கனவே அதிமுக எம்பியாக இருந்த முகம்மது ஜான் மறைவால் ஒரு சீட் காலியானது. இந்த இடத்திற்கு திமுக தரப்பு புதுக்கோட்டை அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்தது. இவரும் போட்டியிட்டு அந்த இடத்திற்கு தேர்வானார்.
2025 ஜூலை 24 வரை புதுக்கோட்டை அப்துல்லா எம்பியாக இருப்பார். இந்த நிலையில் இன்னும் 2 இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு எம்பிக்கள் சீட்களிலும் திமுக தனது எம்எல்ஏக்கள் பலத்தால் போட்டியின்றி வெற்றிபெற உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுக சார்பாக ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் எம்எல்ஏ ஆன காரணத்தால் தங்கள் ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் இவர்களின் இடங்களுக்கு தற்போது திமுக சார்பாக எம்பிக்கள் தேர்வாக உள்ளனர். திமுக வேட்பாளர்களாக நாமக்கல் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 4-ல் நடக்க உள்ள தேர்தலில் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

யாருக்கு யார் இடத்தில் போட்டியில்
இதில் அதிமுகவின் கே.பி முனுசாமி இடத்தில் திமுக டாக்டர் கனிமொழி போட்டியிட இருக்கிறார். வைத்திலிங்கம் இடத்தில் திமுக சார்பாக ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். இதில் கனிமொழி பதவி ஏப்ரல் 2ம் தேதி 2026ல் நிறைவுக்கு வருகிறது. கே.பி முனுசாமி பதவிக்காலம் ஏப்ரல் 2, 2026ல் நிறைவுக்கு வருவதால் அவரின் இடத்தில் எம்பியாகும் கனிமொழி 2026 வரை மட்டுமே எம்பியாக இருக்க முடியும். இன்னும் நான்கரை வருடங்கள் அவர் எம்பியாக இருக்க முடியும்.

நாமக்கல் ராஜேஷ்குமார்
ஆனால் திமுக சார்பாக எம்பியாகும் ராஜேஷ்குமார் அடுத்த வருடம் ஜூன் 29 வரை மட்டுமே எம்பியாக இருப்பார். ராஜேஷ் குமார் தற்போது வைத்திலிங்கம் இடத்தில் எம்பியாகிறார். வைத்திலிங்கம் பதவிக்காலம் 2022, ஜூன் 29ல் நிறைவு பெறுவதால் அவரின் இடத்தில் எம்பியாகும் திமுகவின் ராஜேஷ்குமார் வெறும் 10 மாதங்கள் மட்டுமே எம்பியாக இருக்க முடியும். அதாவது ராஜேஷ்குமார் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எம்பியாக இருக்க முடியும். பெரும் போராட்டத்திற்கு பின் அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் நீண்ட காலம் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
கட்சிக்கு உள்ளே பல தலைகளுக்கு இந்த பதவி அளிக்கப்படும் என்று பேச்சுக்கள் அடிப்பட்டு கடைசியில் ராஜேஷ் குமாருக்கு பதவி வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. ஆனால் இவர் திமுகவிற்காக கடுமையாக தேர்தல் பணிகளை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் திமுக அதிக இடங்களை வெல்ல இவரின் தேர்தல் பணிகள் முக்கிய காரணமாக இருந்த நிலையில் இந்த எம்பி பதவி தற்போது தேடி வந்துள்ளது.

வாய்ப்பு
தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தேர்தல் நேரத்தில் இவர் நன்றாகவே பணியாற்றினார். அதோடு நேரடியாக இவருக்கு அறிவாலயத்தில் நல்ல பெயரும் இருப்பதால் இந்த எம்பி பதவி தேடி வந்து இருக்கிறது. காந்திச்செல்வன், பார் இளங்கோவன் போன்ற நாமக்கல் திமுக தலைகளுக்கு இடையில் கொஞ்சம் போராடித்தான் இவர் இந்த இடத்தையே பிடித்து இருக்கிறார். ஆனால் இவ்வளவு போராட்டங்களுக்கு பின் பதவி வந்தும்.. இவர் ஒரு வருடம் கூட எம்பியாக இருக்க மாட்டார் என்பதுதான் அவரது ஆதரவாளர்களை கொஞ்சம் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications