சென்னை சந்தையில் காய்கறி “பர்சேஸ்”.. தடையை மீறினாரா நிர்மலா சீதாராமன்? ரவுண்டு கட்டிய பியூஷ் மானுஷ்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அவரது பாதுகாவலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைத்து இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே பாலிதீன் பைகள் உட்பட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான தடை அமலில் உள்ளது.
அதேபோல் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவற்றை உற்பத்தி செய்யவும் தடை செய்யப்பட்டது.
வளர்ந்த நாடுகளில் உலகில் 3-வதாக இந்தியா.. சிறந்த தலைமை தான் காரணம்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
பிளாஸ்டிக் பை
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க தமிழ்நாடு அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளில் இன்று வரை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே அதிகாரிகள் ரெய்டு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டாலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு என்பது தடுக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இப்போது தமிழ்நாடு வந்து இருக்கிறார். நேற்று சென்னை வந்தடைந்த அவர் தனது ட்விட்டர் கணக்கில்ல் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மயிலாப்பூர் சந்தை
அதில் அவர், மைலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி வியாபாரிகளுடன் பேசினார். அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுடனும் சிறிது நேரம் பேசிய நிர்மலா சீதாராமன், பாகற்காய், கருணை கிழங்கை பார்த்து பார்த்து வாங்கினார்.
பியூஷ் மானுஷ்
இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமன் அருகில் இருக்கும் அவரது பாதுகாவலர் கையில் பாலிதீன் பையில் காய்கறிகள் உள்ளன. இதனை வட்டமிட்டு காட்டியுள்ள பியூஷ், "சென்னையில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியுள்ளார்.
விதி மீறல்
இதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கான அபராதத்தை அவரே செலுத்தினால் பாராட்டப்பட வேண்டியதாகும். இனி நிர்மலா சீதாராமன் துணி பையை எடுத்துச் செல்லுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். பியூஷ் மானுஷ் தெரிவித்து இருக்கும் இந்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.