சுப்ரீம் கோர்ட் போட்ட புதிய உத்தரவு.. கையை பிசையும் ஓபிஎஸ்.. சென்னையில் திடீர் ஆலோசனை!
இபிஎஸ் முறையீடு தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த உத்தரவு குறித்து ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
சென்னை: அதிமுக விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவுகளை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தல் காரணமாக அதிமுகவின் உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் வேட்பாளர் நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மனு
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11ம் நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
எடப்பாடி பழனிசாமி முறையீடு வழக்கில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிப்.3ல் விசாரணை
இந்த விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையத்தை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

திடீர் ஆலோசனை
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவுகள் எடுக்க ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் அதிமுக பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications