நானென்ன கனவா கண்டேன்? சசிகலாவை சுற்றும் ஓபிஎஸ் அஸ்திரம்! குறிவைத்த ’ஜெ’ சர்ச்சை! சிக்கலில் இணைப்பு?
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி பயணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சசிகலாவுக்கு எதிராக வீசிய அஸ்திரமே தற்போது அவர்கள் இணைவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை.
கேட்டுச்சா.. ‛இடைக்கால’ இல்லை.. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரே இபிஎஸ் தான்!அழுத்திய மாஜி அமைச்சர்கள்
சசிகலா - ஓபிஎஸ்
ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் சசிகலா தரப்பு, டிடிவி தினகரன் தரப்பில் இருந்த நிர்வாகிகளும், ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் தென் மண்டல நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சசிகலாவுக்கு எதிராக வீசிய அஸ்திரமே தற்போது அவர்கள் இணைவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
தர்மயுத்தம்
அது என்ன என விசாரித்தபோது தான் பல தகவல்கள் கிடைத்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் போது முதல்வர் பதவியை இழந்த ஓபிஎஸ் அப்போது தர்மயுத்தத்தை தொடங்கினார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்தே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த 27ஆம் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். அதில், சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்திப்பில் சிக்கல்?
இதுகுறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதற்கான விவர அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இது ஓபிஎஸ்- சசிகலா சந்திப்புக்கு இடையூறாக இருக்கும் என்கின்றனர் விவரமறிந்த சசிகலா தரப்பினர். ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.