கிரீன் சிக்னல்.. ஒரு பக்கம் அல்ல.. இருபக்கம்.. ரவீந்திரநாத்துக்கு ஜாக்பாட்? சைலண்ட் மோடில் ஓபிஎஸ்!
சென்னை: பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க விரும்புகிறாராம். அந்த வகையில் அதிமுகவிற்கு இடம் தர தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக மீண்டும் தகவல்கள் கசிந்துள்ளது உள்ளது. இதற்காக ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும், 65 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் உள்ளது. பாஜக, இந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்ததன் காரணமாக 3 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. அத்துடன் ஓரளவு வாக்கு வங்கியும் பெற்றுள்ளது.
நோட்டோவுடன் போட்டி போட முடியாத கட்சி என்று கிண்டல் செய்தவர்களுக்கு 3 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் நுழைந்து பாஜக தமிழக அரசியல் கணக்கை மீண்டும் தொடங்கி உள்ளது.
பிரதமர் மோடி தயார்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க விரும்புகிறாராம். அந்த வகையில் அதிமுகவிற்கு இடம் தர தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அதிமுக செய்த உதவிகளுக்கு பிரதிபலனாக அந்த கட்சியை கூட்டணி சேர்க்க பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
பெரிய தோல்வி
அதிமுக சார்பில் கடந்த 2009 தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பி ஓபி ரவீந்திரநாத் மட்டுமே. பொன்.ராதாகிருஷ்ணன், சிபிஆர் உள்பட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக தலைவர்கள் கூட கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினர். அப்படியான சூழலில் மத்திய அமைச்சரவையில் ஓபி ரவீந்திராத் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் அப்போதே வெளியாகின. ஆனால் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்த நிலையில் ஒரு சில கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இடம் அளித்தார் பிரதமர் மோடி. அதிமுகவிற்கு இடம் தரவில்லை.
அதிமுகவிற்கு வாய்ப்பு
கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து பிரதமர் மோடி பரிசீலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் வெறும் வதந்தி என்பது மட்டுமே பின்னாளில் தெரியவந்தது. ஆனால் மீண்டும் அதிமுகவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து பிரதமர் மோடி பரிசீலிப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
ஓபிஎஸ் அழுத்தம்
இந்த முறை ஓபி ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி எப்படியும்வாங்கிவிட வேண்டும் என்று அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது... இந்த தகவல் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் போயுள்ளதாம். தேனி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் ஓபிஆருக்கு அமைச்சர் பதவி இந்த முறை கிடைத்துவிடுமா என்று ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
கிரீன் சிக்னல்
சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி, எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியாத நிலை, கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் முழு ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் வருத்தத்தில் இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்யும் முயற்சியாக எடப்பாடி பழனிசாமி, ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கிரீன் சிக்னல் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சசிகலா ஒரு பக்கம் அதிமுக தொண்டர்களை குறிவைத்து களம் இறங்கி உள்ளதால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதனால் தான் அண்மையில் சென்று ஒ பன்னீர்செல்வத்தை அவர் பார்த்ததாக கூறப்படுகிறது. எனவே பிரதமர் மோடி அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளித்தால் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.