தமிழகத்தில் வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு மக்கள் செல்லத் தடை
வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை: வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா, ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக கோவில்கள் வழிபாட்டுத் தலங்களில் அனைத்து நாட்களும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரசு மீண்டும் வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் தடை
மார்கழி மாதம் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வைகுண்ட எகாதசி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. தை மாதம் தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இனி அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

நான்கு நாட்கள் கூட்டம் கூடும்
வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். இந்து ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகரிக்கும். அரசின் புதிய கட்டுப்பாடு காரணமாக
இனி கோவில்களில் திங்கள் முதல் வியாழன் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அப்படி அதிக அளவில் கூட்டம் கூடினால் வார நாட்கள் முழுவதும் அனுமதி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பொங்கல் கொண்டாட தடை
இதே போல தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் போது கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. அனைத்து முக்கிய விழாக்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே ஒளிபரப்பானது.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்
கொரோனா பரவல் குறையத் தொடங்கவே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வாரத்தில் மூன்று நாட்கள் தவிர மற்ற நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்களில் அனுமதிக்கப்பட்டனர். அக்டோபர் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்தையும் இனி ஆன்லைனில் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications