ஜெயலலிலா எப்படி இறந்தார் தெரியுமா..? திண்டுக்கல் லியோனி பேச்சால் எழுந்த சர்ச்சை
சென்னை: கல்லறையில் உள்ள ஜெயலலிதாவை எழுப்பிக் கேட்டால் மட்டுமே ஜெயலலிதா மரணத்துக்கான மர்மம் தெரியவரும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.
Recommended Video
புதுவண்ணாரப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், பாத்திரங்கள் போன்ற நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உ றுப்பினர் எபினேசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜகவுக்கு பெரியார் மண்ணில் இடமில்லை
விழா மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, "பாஜக என்ன செய்தாலும் அவர்களுக்கு பெரியார் பிறந்த இந்த தமிழ் மண்ணில் இடமில்லை. விவசாயத்தை பற்றி பேசும் பிரதமர் மோடி 124 விவசாயிகளின் இறப்பிற்கு காரணமாக இருக்கிறார். ஐ.நா சபையில் திருக்குறள் பற்றி பேசும் பிரதமர், தமிழகம் வந்தால் பாரதியார் பாடல் பாடுகிறார்.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்களை மோடி கண்டுகொள்ளாதது ஏன்?
தமிழ் மொழி மீது இவ்வளவு அக்கறை காட்டும் அவர் நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும்போது கண்டு கொள்ளாதது ஏன்? பெரியார் பிறந்த திராவிட தமிழகத்தில் சென்னை மாநகரத்தின் வணக்கத்திற்குறிய தாயாக தலித் பெண்ணை நியமித்ததன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

ஜெயலலிதா மர்ம மரணத்தை ஸ்டாலின் கண்டுபிடிப்பார்
அதிமுக தலைவர் ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ஏன் எடப்பாடி பழனிசாமிக்குமே தெரியாது. கல்லறையில் இருக்கும் ஜெயலலிதாவை எழுப்பி கேட்டால் தான் மர்மம் தெரியவரும். இதை விட வெட்கக்கேடு அக்கட்சிக்கு உண்டா? ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தையும் வெகு விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிகொண்டு வருவார்." என்றார்.

ஜெயலலிதா மரண வழக்கு
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications