கணக்கே இல்லாமல் அழுது.. தனிமையில் வெந்து.. சரித்திரம் படைத்து.. பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் கதை!
சென்னை: 10 வயசில் தன் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்ததும் தனிமையில் சென்று கணக்கில்லாமல் அழுது தீர்த்தவர் நர்த்தகி நடராஜ். இன்று நாடே வியந்து போற்றும் அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது மத்திய அரசு.
"நான் ஏன் இப்படி பிறந்தேன்னு எனக்கே ஆச்சரியம். அது என்னமோ தெரியல எனக்கு சட்டை டிரவுசர் போட்டுக்கவே பிடிக்காது, எனக்குள்ள ஒரு பெண்மை இருந்துச்சு. ஆனா என்னை எல்லாருமே கிண்டல் பண்ணாங்க. அப்போ எனக்கு பத்மினி, வைஜெயந்திமாலா டான்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும்.
அவங்க சினிமா நிறைய பார்த்து டான்சை ரசிப்பேன். 11-ம் வகுப்பு வரைதான் வீட்டில படிக்க வெச்சாங்க. அதுக்கு மேல ஸ்கூலுக்கு அனுப்ப அசிங்கமா நினச்சாங்க. அதனாலதான் வீட்டை விட்டே ஓடிப்போற நிலைமை எனக்கு வந்துடுச்சு." என்று ஒருபேட்டியில் மனம் திறந்து சொல்லும்போதுதான் நடராஜ் பட்ட அவமானங்களின் வலிகளை உணர முடிகிறது.
முள் பாதைகள்
அன்று உடலளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் ஏராளமான ஏளனங்களை அந்தசின்ன வயசிலேயே சந்தித்து முடித்துவிட்டார் நடராஜ். கிடைத்த வசவு சொற்களை எல்லாம் பாராட்டுக்களாக மாற்ற முயன்றார். வழியெல்லாம் பாதத்தில் பட்டு கிழிக்கும் முள்பாதைகளை முல்லைப்பூ விரிப்பாக மாற்ற முயன்றார்.
மவுசு அதிகமானது
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நடராஜூக்கு மனசு அலை பாய்ந்தது பரதத்தின் மீதுதான். அதனால்தான் இந்த மதுரைவாசி தஞ்சாவூருக்கு சென்று முறைப்படி பரதம் கற்று... பின் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்து, உலகம் முழுக்க பயணிக்க ஆரம்பித்தார். வெளிநாடுகளில் நடராஜ் நடனத்திற்கு மவுசு அதிகம். அதனால்தான் ஆயிரக்கணக்கான மேடைகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
நிகழ்ச்சிகள்
வெள்ளியம்பலம் என்ற நடனப்பள்ளியை சென்னையில் தொடங்கி அதிலும் பல மாணவர்களை உருவாக்கி அனுப்பி வைத்து வருகிறார். வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் கலை கலாச்சார அமைப்புகளின் பேரில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
டாக்டர் பட்டம்
சங்க இலக்கியங்களையும், நவீன கதைகளையும் தன் நடனத்தில் புகுத்தி அசத்துவதுதான் நர்த்தகி நடராஜின் ஸ்பெஷாலிட்டியே. அதனால்தான் இவருக்கு தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது.
பத்மஸ்ரீ விருது
அது மட்டுமா, தமிழக அரசின் 11-ம் வகுப்பிற்கான தமிழ்ப் பாட புத்தகத்தில் நர்த்தகி நடராஜின் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது என்றால் இவரது பெருமையை நாடு நன்கு உணர்ந்துள்ளது. இன்றைக்கு பத்மஸ்ரீ விருது பெறும் அளவுக்கு தன்னை நிரூபித்துள்ளார்.
முதன்மைகள்
நிறைய முதன்மைக்கு சொந்தக்காரர் நர்த்தகி நடராஜ். முதல் டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை, முதல் பாஸ்போர்ட் பெற்ற திருநங்கை, முதல் தேசிய விருது பெற்ற திருநங்கை, முதல் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை என்ற பெருமைகளை தக்க வைத்து கொண்டுள்ள நர்த்தகி நடராஜ்-க்கு இன்னும் பல முதன்மைகள் வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றன.