இவ்வளவு வேகமா? காலாவதியான அவசர சட்டம்! கல்லா கட்டத் தொடங்கிய சூதாட்ட ஆப்கள்! மக்களே கவனம்!
சென்னை : தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் அது காலாவதியாகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன் தினத்திலிருந்து ஆன்லைன் சூதாட்ட ஆப்கள் செயல்பட்டு வரும் நிலையில் பணம் செலுத்தி விளையாடுமாறு பலருக்கும் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கி இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அங்கே அண்ணாமலை ஆளுநரை பார்த்த நேரத்தில்.. இங்கே புயலை கிளப்பிய காயத்ரி.. ஓஹோ.. டெல்லிக்கு போன மெசேஜ்
ஆன்லைன் ரம்மி
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.
ஆளுநருக்கு விளக்கம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .நீண்ட காலமாக அந்த மசோத கிடப்பில் இருந்த நிலையில், அது தொடர்பான கோரிக்கைகளால் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுத்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அது சட்டமாவது தாமதமாகியுள்ளது.
ஆளுநர் ஆர்என் ரவி
ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் நேற்று முன் தினத்துடன் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன.
காலாவதியான சட்டம்
கடந்த சில நாட்களாக இடைக்கால தடை காரணமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட செயலிகளில் பணம் செலுத்துவது தடை செய்யப்பட்டு இருந்தது. வங்கி கணக்கில் இருந்தோ அல்லது யுபிஐ ஆப்கள் மூலமாக பணம் செலுத்த முயலும் போது தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பணம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் ஓரளவு குடும்பங்கள் நிம்மதியாக இருந்தன. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில் நேற்று இருந்து பலருக்கும் ரம்மி கணக்கில் பணம் செலுத்தி விளையாடலாம் இப்போதே பணம் செலுத்துங்கள் என குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
வரவிருக்கும் ஆபத்து
ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த பிறகு கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மி தடை விலக்கப்பட்டுள்ளதால் மேலும் பல தற்கொலை சம்பவங்கள் நிகழும் அச்சமுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் எனவும் விளையாடியே ஆக வேண்டும் என்று இருப்பவர்கள் மனநல ஆலோசனை பெறலாம் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அதே நேரத்தில் தமிழக அரசும் அனைத்து கட்சிகளும் ஆளுநரை தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.