டாஸ்மாக்குக்கு செஞ்சது போல.. பக்காவான ஏற்பாடுகள்.. காய்கறி விற்பனைக்கும் அவசரமாக தேவை!
சென்னை: கொரோனா அதிகவேகமாக பரவுவதற்கு காரணமாக இருந்ததால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. இதனையடுத்து காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்தது போல சென்னையில் காய்கறி விற்பனைக்கும் முழுவீச்சில் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை முழு வீச்சில் இயங்கியது. இதனால் லாக்டவுனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்ட போதும் விவசாயிகள் ஓரளவு தப்பி இருந்தனர்.
கிடைத்த வாகனங்களை பயன்படுத்தி கோயம்பேடுக்கு காய்கறி, பூக்கள், பழங்களை விவசாயிகள் அனுப்பி வைத்தனர். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தை மட்டும் லாக்டவுன் காலத்திலும் களைகட்டியது. கோயம்பேடு சந்தை திறந்து இருந்ததால் பொதுமக்களுக்கும் வழக்கமான விலையில் காய்கறிகள் கிடைத்து வந்தன. லாக்டவுன் காலத்தில் இது மிகப் பெரும் உதவியாகவும் இருந்து வந்தது.
திரிபுரா: மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா- பாதிப்பு 88 ஆக அதிகரிப்பு
மூடப்பட்ட கோயம்பேடு
ஆனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்றவர்கள், பணிபுரிந்தவர்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் கொரோனா பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் கோயம்பேடு சந்தையை மூட வேண்டிய நெருக்கடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தற்போது திருமழிசையில் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்யலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
காய்கறி விலை உயர்வு
இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே காய்கறி விலைகள் விறுவிறுவென உயர்ந்துவிட்டன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லாக்டவுன் காலத்தில் வருவாய் இல்லாத சூழலில் காய்கறிகளும் ஒரு சுமையாக உருவெடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு ஆறுதல் தந்த சூழ்நிலையும் இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் விற்பனைக்கு ஜரூர் ஏற்பாடுகள்
தற்போதைய நிலையில் திருமழிசையில் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் வர்த்தகர்களின் உடனடி கோரிக்கை. டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க போர்க்கால அடிப்ப்டையில் தடுப்புகள் அமைப்பு, சமூக இடைவெளிக்கான ஒழுங்குகளை செய்வது, உரிய பாதுகாப்பு தருவது என முழுமையாக அரசு தரப்பு செயல்பட்டது. இதனால் டாஸ்மாக் நேற்று திறக்கப்பட்ட போது எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.
கோயம்பேடு ஆகுமா திருமழிசை?
இதேபாணியில் திருமழிசையில் இன்னொரு தற்காலிக கோயம்பேடு சந்தைய அரசால் உருவாக்க முடியும். இது சாத்தியமானதுதான். இப்படி திருமழிசை காய்கறி சந்தையை உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அரசு செய்து கொடுத்தால்தான் உயர்ந்திருக்கும் காய்கறி விலையும் குறையும். திருமழிசை சந்தை முழுமையாக செயல்பட்டால் கோயம்பேடு சந்தைய நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்விலும் ஆறுதல் கிடைக்கும்.