சும்மாவா! அப்பவே சொன்ன பெரியார்.. வாடகைத்தாய் முறை பற்றி 1938லேயே எழுதியது என்ன தெரியுமா?
சென்னை: நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு பிறந்துள்ள இரட்டை குழந்தைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் 1938ம் ஆண்டிலேயே வாடகைத் தாய் (Surrogacy) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் குறித்து பெரியார் கூறியுள்ள கருத்து வேகமாக பரவி வருகிறது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றும், இவற்றை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீறி விட்டனர் என்றும் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.
மேலும் ஒருபடி மேலே போய் அவர்கள் இந்து மத பழக்கத்தை சீரழித்துவிட்டனர் என்றும் சிலர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் பழகத்தொடங்கிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். இவ்வாறு இருக்கையில், சுமார் 7 ஆண்டுகள் காதலில் மூழ்கி திளைத்த இவர்கள் அவ்வப்போது மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தனர். திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு விரைவில் என பதில் சொல்ல வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாட்டில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம்
இவர்களது திருமணம் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்கும்படி விமர்சையாக நடைபெற்றது. இவ்வாறு இருக்கையில் நேற்று தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். நேற்றிரவு தொடங்கி தற்போது வரை இதுதான் ஹாட் நியூஸாக வலம் வந்துகொண்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பதிவில், "நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். பிரார்த்தனை, ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் என எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

விவாதம்
இவ்வாறு இருக்கையில், சிலர் இவர்களது உறவு முறை குறித்தும் குழந்தை பேறு குறித்தும் பல்வேறு விவாதங்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பிருந்தனர். குறிப்பாக இருவரில் யாரோ ஒருவருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளது என்று அவர்கள் வெளிப்படையாகவே விவாதிக்க தொடங்கினர். இந்நிலையில், பெரியார் தான் எழுதிய 'இனி வரும் உலகம்' எனும் புத்தகத்தில் குழந்தை பேறு குறித்து குறிப்பிட்டுள்ளதை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தைப்பேறு
அதாவது சாஸ்திரம் சம்பிரதாயம் எனும் இருக்கும் காலம் மாறி விரைவில் அறிவியல் மனிதர்களின் வாழ்வில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியுள்ளதாவது, "பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்."
என்று பெரியார் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதனை குறிப்பிட்டு உலகம் இனி இவ்வாறுதான் இயங்கும் எனவும், எனவே இதில் கவலைகொள்வதற்கோ, விமர்சிப்பதற்கோ ஏதும் இல்லையென்றும் சிலர் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications