அடங்க மாட்டேங்குறாங்களே.. மீஞ்சூரில் பெரியார் சிலை சேதம்.. கோவை தொடங்கி.. தொடரும் சர்ச்சை!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டு இருந்த நிலையில் இன்று மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. இதையடுத்து அங்கு கூடிய திமுக, திக, விசிக, மதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
மிகப்பெரிய விலை.. இந்தியாவுக்கு வாய்ப்பே இல்லை.. 'ஹெர்ட் இம்யூனிட்டி' குறித்து மத்திய அரசு
வழக்குப் பதிவு
இதுதொடர்பாக, கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் கீழ் 153, 153 ஏ(1)(பி), 504 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசில் சரண்
இதையடுத்து, போத்தனூரைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) தானாக முன் வந்து போலீசில் சரண் அடைந்தார். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் அவமதிப்பு
இதற்குப் பின்னர் சேலத்தில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போர்த்துவதற்கு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ச்சியாக கல்வராயன் மலையில் பெரியார் நீர் வீழ்ச்சி பெயர் பலகை மீது காவி சாயம் பூசப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்டது. அத்துடன் பழைய சீரியல் பல்பு, சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் ஆகியவையும் அண்ணாசிலையின் மீது வீசப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாசிலையை அவமதித்தவர்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டது. பின்னர் அண்ணா சிலை அருகே காவிக்கொடி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர். எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்து இருந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.