PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1991 போல திமுக அரசு டிஸ்மிஸ்-பாஜக எச்.ராஜா பகிரங்க மிரட்டல்
சென்னை: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ, பிஎப்ஐ- PFI) மீது மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1991-ம் ஆண்டு போல திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
1989 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றது. மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 13 பேர் சென்னையில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக புகார் கூறப்பட்டது.
1990-91-ம் ஆண்டு பிரதமராக சந்திரசேகர் இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசின் ரகசியங்களை திமுக அரசு கசியவிட்டது என கூறி அரசியல் சாசனம் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1991-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனை இப்போதும் தமது சாதனை என கூறி வருபவர் சுப்பிரமணியன் சுவாமி.
பிஎஃப் தடை.. தமிழ்நாடு அரசும் பின்பற்றனும்! முதல்வர் மீது மக்கள் சந்தேகம் - கிளப்பிவிடும் எச்.ராஜா
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை
இந்த விவகாரத்தை தற்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கையில் எடுத்துள்ளார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இத்தடை 5 ஆண்டுகாலம் நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி இருந்தனர். இச்சோதனைகளின் போது 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆட்சி கலைப்பு என எச்.ராஜா மிரட்டல்
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது நேற்று மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். தமிழகத்திலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா தமது ட்விட்டர் பதிவில், 1991 ல் எல்.டி.டி.ஈ க்கு அரசு தகவல் கசிய விட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எனவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணை யாக நடப்பது தமிழக அரசிற்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை PFI க்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார் மீதுநடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார்.
பாஜக தொடர் மிரட்டல்
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதே தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும்; அதாவது தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற வேண்டிய சட்டசபை தேர்தல் முன்கூட்டியே மத்திய பாஜக அரசால் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எச்.ராஜா, பகிரங்கமாகவே திமுக ஆட்சியை கலைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
1976 திமுக ஆட்சி டிஸ்மிஸ்
நாட்டில் 1975-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் அவசரநிலை (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை அன்றைய திமுக அரசும் மறைந்த முதல்வர் கருணாநிதியும் கடுமையாக எதிர்த்தனர். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்குள்ளாகினர். மேலும் 1976-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.