தடை செய்த போது டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடத்திய பிஎப்ஐ: ஆளுநர் ஆர்.என்.ரவி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை: வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள உரை: வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் கவனிக்கத்தக்கவை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரானவற்றில் குறைவான தண்டனை பதிவாவதை ஏற்க முடியாது
ஒரு கோயில் என்பது ஆன்மிகத்தலமாகும். அது வெறும் கலை, கலாசார பகுதி அல்ல. ஆன்மிகத்தை எடுத்து விட்டால் அது ஆன்மா இல்லாத உடல் போல வேகமாக சிதைந்து விடும். ஆலயங்களின் மோசமான பராமரிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த யுனெஸ்கோ ஆணையத்தின் கருத்துகள் அவசரமாகவும் நேர்மையாகவும் கவனிக்க உகந்தவை.
நமது கலாசாரம் என்பது நமது அடையாளம். இசை, நடனம், பாடல்களை உள்ளடக்கிய நமது கலாசாரம் ஆன்மிகத்தில் வேரூன்றியுள்ளது. அனைத்தும் ஆலயங்களைச் சுற்றிலும் வளர்ந்து தழைத்துள்ளன. இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.
ஆளுநர் ரவியின் குடியரசு தின உரை:
முன்னதாக ஆளுநர் ரவி வெளியிட்டிருந்த குடியரசு தின வாழ்த்துச் செய்தி:இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இந்த நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம். தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம். இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது. இவ்வாறு ஆளுநர் ரவி கூறியிருந்தார்.