பிரதமர் கேர்ஸ் நிதி.. அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும் ப.சிதம்பரம்.. பதில் சொல்வது யார் என கேள்வி
சென்னை: பிரதமர் கேர்ஸ் நிதி தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.
பொது நலன் வழக்குக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நிவாரணத்திற்கான பிஎம் கேர்ஸ் நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப்-க்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை சேர்ந்துள்ள பணம் குறித்த தகவல்களை வெளியிடுவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது என்றும் மனுவில் கூறப்பட்டது.
ஆனால், மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பிஎம் கேர்ஸ் நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப்க்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று கூறியது.
இருப்பினும், காங்கிரஸ் கட்சி, இந்த நிதி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
சர்ச்சைக்குரிய விமர்சனம்- மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்- பிரசாந்த் பூஷன் நிராகரிப்பு
இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டில் கூறியதாவது: "PMCares நிதியத்தின் சட்டப் பொறுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு இறுதியானதுதான். அதில் மாற்றமில்லை. ஆனால் கல்வியாளர்கள் வட்டத்தில் இது நீண்டகாலம் பேசப்படும். பிரதமர் நிதியில் வெளிப்படைத்தன்மை, நிதி மேலாண்மை உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது பற்றி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவிக்கவில்லை.
2020 மார்ச் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் ரூ .3076 கோடியை வழங்கிய நன்கொடையாளர்கள் யார்? அவை சீன நிறுவனங்களை உள்ளடக்கியதா? ஏப்ரல் 1ம் தேதி முதல் பெறப்பட்ட தொகை என்ன, நன்கொடையாளர்கள் யார்? பல்வேறு கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கான நடைமுறை என்ன? நிதியத்தின் தொடக்கத்திலிருந்து பணம் பெறுபவர்கள் யார்? நிதியை பெறுவோரிடம் சான்றிதழ் கோரப்பட்டு பெறப்படுகின்றனவா? இந்த நிதி தகவல் அறியும் உரிமைக்கு அப்பாற்பட்டது என்றால், இந்த முக்கியமான கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? இவ்வாறு ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ், கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், அரசு வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்திற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசு என்பது மக்களின் சேவகன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.