மோடி வருகை.. கருப்பு பலூனை பறக்க விட தயாராகும் வைகோ.. பரபரக்கும் மதுரை
நாளை பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புகள் கூடி வருகின்றன.
சென்னை: நாளைக்கு பிரதமர் மோடி தமிழகம் வரப்போகிறார். அவருக்கு யாரெல்லாம் எதிர்ப்பு காண்பித்து என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று இப்போதே எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட ஆரம்பத்துவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம், நீட்தேர்வு, ஸ்டெர்லைட் போன்றவற்றினால் கொதித்து போய் இருந்த சமயத்தில்தான் போன வருஷம் மோடி தமிழகம் வந்தார். எங்கே பார்த்தாலும் கருப்பு மயம் என்ற அளவுக்கு விதம் விதமான முறையில் கருப்பு நிறத்தைக் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் இதில் முன்னணி வகுத்தன. "கோ பேக் மோடி" என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு நம் மக்கள் கொதித்துபோய் விட்டார்கள். அதை விட கருப்பு பலூனைப் பறக்க விட்டு புதிய பரபரப்பையும் ஏற்படுத்தினர்.
மோடி வரவே இல்லை
இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு குறிப்பாக காவிரி டெல்டா மக்களுக்கு மிகப் பெரும் அதிருப்தி நிலவுகிறது. புயல் பாதித்த பகுதிகளில் போதிய அளவு எந்த நிவாரணப் பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அரசு போதிய நிதியைத் தரவில்லை. குறிப்பாக பிரதமர் மோடி வரவே இல்லை என்பதுதான் மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.
மதுரை வருகை
இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் நாளை ஹைகோர்ட் அனுமதியுடன் போராட தயாராகி வருகின்றன கட்சிகள். இநாளை மதுரைக்கு பிரதமர் மோடி வரப்போகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்கவுள்ளார். தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்புகளை காட்ட போகிறோம் என்று பலரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
கண்டுபிடிக்கவே முடியாது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான் இதில் தீவிரமாக இருக்கிறார். "தப்பித் தவறி மோடி ஆட்சிக்கு மட்டும் வந்துட்டா, இந்த நாடு நாசமா போயிடும் என்கிற கவலை எனக்கு ரொம்பவே இருக்கிறது. மதிமுக சார்பில் எனது தலைமையில் கறுப்புக்கொடியை அவருக்கு காட்டுவேன். கறுப்பு பலூனையும் பறக்கவிடுவோம். சிஐடி-களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து பலூனை பறக்க விட போகிறோம்" என்றார்.
இழப்பீடுகள்
அடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோ, "பட்டேல் சிலை வைக்க மூவாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குறாங்க, ஆனா 350 கோடியை 8 மாவட்ட வேளாண்குடி மக்களுக்கு, இழப்பீடாக ஒதுக்குறாங்க.வாங்கு வங்கிக்காக தமிழகம் வரப்போகிறாரு. அப்படி தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி எல்லாம் நாங்க காட்டமாட்டோம். ஏன்னா, கருப்பு கொடிக்கென்று ஒரு தனிப்பெருமை இருக்கு. அதை பிரதமருக்கு எதிராக பயன்படுத்தி சிறுமைப்படுத்த நாங்கள் விரும்பல.
சீமான் பேட்டி
அதற்கு பதிலாக பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் எங்கள் நாம் தமிழர் கட்சியின் நோக்கம்" என்றார். இதுபோலவே, பிரதமரின் வருகைக்கு 160 அமைப்புகளுடன் சேர்ந்து கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தியும் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டில் வராத ஜாதிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் 10 சதவீது இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியதை கண்டித்துதான் பிரதமருக்கு கருப்பு கொடி போராட்டம் நடத்த போகிறோம் என்று பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
போராட அனுமதி
இது எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை ஐகோர்ட்டில் ஒருவர் அனுமதியே வாங்கி விட்டார். மதுரையைச் சேர்ந்த தேவேந்திரகுமார் என்பவர், "கஜா புயல் சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை, தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு திணித்து வருகிறது, இதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்" என்று மனு போட்டு அதற்கான அனுமதியும் வாங்கி வைத்திருக்கிறார்.
வைகோ யார்?
இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், இதற்கெல்லாம் தனி ஒரு ஆளாக பதிலடி தந்துகொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுநத்ராஜன். அமெரிக்காவில் போய் கிடைக்கக்கூடிய சிகிச்சை நமக்கு கிடைக்க போகிறது, சாமான்ய மக்களும் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமா? பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
என்னாகுமோ?
ஆக மொத்தம் நாளைக்கு பிரதமரின் வருகை எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை. போன முறையே இங்கு வந்து பேசும்போது, "நான் டீ விற்ற காலம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அதனால் தான் நான் இன்னும் சாதாரண ஆளாக இருக்கேன். தினமும் 2 கிலோ விமர்சனம் கிடைக்கிறது. அது தான் என் ஆரோக்கியத்திற்கான ரகசியம். விமர்சனங்களை நான் வரவேற்பவன்" என்று பேசிவிட்டு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊத்திவிட்டு போனார். நாளை என்னாகும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.