சாதி என்பது கெட்ட வார்த்தையல்ல! பல பேர் அப்படித்தான் நினைக்குறாங்க.. அன்புமணி சொன்ன புது விளக்கம்.!
சென்னை : சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன எனவும், சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாமக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் அன்புமணி பாமக 2.0, பாட்டாளி மாடல் ஆட்சி ஆகியவை குறித்து பேசி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. சாதி என்றால் 'கெட்ட வார்த்தை' என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற அரசியல் பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் அன்புமணி ராமதாஸ் இதனை கூறியுள்ளார்.

சாதி பெயர்
பயிலரங்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி," சென்னை மாநகராட்சி தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவதை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். சுதந்திரப் போராளிகளில் பலருக்கு, அவர்களுடைய சாதிப் பெயரை வைத்துத்தான் அவர்களின் அடையாளமே இருக்கிறது. அதை எந்த அடிப்படையில் பார்ப்பீர்கள், அனைத்துக்கும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க முடியாது.

கெட்ட வார்த்தை இல்லை
சாதி என்பது இருக்கிறது, இனியும் இருக்கப்போகிறது. சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று பல பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சாதியை வைத்து அடக்குமுறை செய்வது மட்டும்தான் தவறு. மற்றபடி சாதி அடிப்படையில் வழிபாடு, உடை, பழக்க வழக்கம், திருமண முறை, உணவு முறை போன்றவையெல்லாம் இருக்கின்றன.

அடிப்படையில் தவறு
மதம், மொழியின் அடிப்படையில் எவ்வளவோ அழகான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அது தவறு" என்றார். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசிய அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்," பாமகவை சிறுமைப்படுத்துவதற்காக, திராவிட கட்சிகளின் யுக்தியால் சாதிக் கட்சி அடையாளம் எங்கள் மீது சுமத்தப்பட்டது" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications