பாமகவிற்கு மாம்பழம் கிடைத்தது - கச்சிதமாக காய் நகர்த்தி தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வாங்கிய ராமதாஸ்
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது. சின்னம் ஒதுக்கும் முன்னதாகவே தேர்தல் அறிக்கையில் மாம்பழம் சின்னத்தை போட்டது வீணாகவில்லை. கச்சிதமாக காய் நகர்த்தி சின்னத்தை பெற்றுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
அரசியல் கட்சிகளுக்கு கட்சிக்கொடியும் சின்னமும் முக்கியமானது. வேட்பாளர் யார் என்று தெரியாவிட்டாலும் கூட சின்னத்தைப் பார்த்து வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த கட்சியின் சின்னமான மாம்பழமே வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்ததே முதற்கட்ட வெற்றியாக கருதுகிறது பாமக.
வட மாவட்டங்களில் உள்ள வன்னிய சமுதாய மக்களை குறி வைத்து தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 1990ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறியது. பாமக கொடியின் நீலம் , மஞ்சள் , சிகப்பு வண்ணம், தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்து தரப்பினருக்காக உருவாக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
பாமகவிற்கு மாம்பழம்
1991ஆம் ஆண்டு முதல் 2019 வரை பல சட்டசபைத் தேர்தல், லோக்சபா, தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்துள்ளது பாமக. பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. 1997ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னம் நிரந்தர சின்னமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம். பாமகவுக்கு 1998ல் மாம்பழம் சின்னம் கிடைத்தது. அப்போதிலிருந்து மாம்பழம் சின்னத்தையே கட்சியின் நிலையான சின்னமாக கொண்டிருக்கிறது
எம்எல்ஏக்கள், எம்பிக்கள்
கடந்த 2001ஆம் ஆண்டு முதல்தான் பாமகவின் வெற்றிக்கணக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது பாமக. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. 20 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது பாமக. 34 இடங்களில் போட்டியிட்ட பாமக 18 இடங்களில் வென்றது.
பாமகவிற்கு தொடர் தோல்வி
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவின் வாக்கு சதவிகிதமும் சரியத் தொடங்கியது.
பாமக அங்கீகாரம் ரத்து
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் பாமக தனது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத் தேர்தலில் 5.23% வாக்குகளை அக்கட்சி பெற்றது. ஆனால் 6% வாக்குகள் அல்லது 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும். அத்தேர்தலில் 3 எம்.எல்.ஏ.க்கள் பாமகவுக்கு கிடைத்ததால் மாநில கட்சி அங்கீகாரம் தப்பியது.
2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாமக 1 இடத்தில் மட்டுமே வென்றது. அதன் வாக்கு சதவீதம் 0.4% ஆனது. இதனால் பாமக தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது.
சுயேச்சை சின்னமான மாம்பழம்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளர் என அறிவித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது பாமக. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெற முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையும் பறி கொடுத்தது. மொத்தமாக 5.3% வாக்குகளையே அது பெற்றுள்ளது. 6% வாக்குகளும் இல்லை 2 எம்.எல்.ஏ.க்களும் இல்லை என்பதால் தொடர்ந்தும் மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்தது. மாம்பழம் சின்னமும் சுயேச்சை சின்னமானது.
மாம்பழம் பழுக்குமா
அதே நேரத்தில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகள் ஒரே சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். பாமகவும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மாம்பழம் சின்னத்தை கேட்டு பெற்று போட்டியிட்டு வருகிறது. நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இலையுடன் இணைந்துள்ள மாம்பழம் பழுக்க வேண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.