கட்சி தொடங்க மாட்டேன்.. மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை!
அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினிகாந்தும் தனது எண்ணத்தை ட்விட்டர் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். கட்சி தொடங்குவது உறுதி என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், குணமடைந்து வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
உடல்நிலை பாதிப்பு
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
வருத்தத்துடன் கூறுகிறார்
என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
என்னை மன்னியுங்கள்
இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும், நான் காட்சி ஆரம்பிப்பேன் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.
ரசிகர்கள் கருத்து
கடந்த நவம்பர் 30ஆம் தேதி உங்களை சந்தித்தபோது ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம்' ‘நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே' என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.
தமிழருவிமணியன், அர்ஜூன மூர்த்தி
மூன்று ஆண்டுகள் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உடல் நலத்தை கவனிங்க அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேறு ஒரு கட்சியின் பெரிய பொறுப்பில் இருந்து என்னுடன் இணைந்த அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கு நன்றி.
என்மேல் அன்பு கொண்டவர்களுக்கு நன்றி
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமே அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாக ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.