இதெல்லாம் கட்டுக்கதை.. ‘தேவைக்கு ஏற்ற டேட்டா கிடைக்கும்’ - கருத்துக்கணிப்பு பற்றி பிடிஆர் விளாசல்!
சென்னை : ராகுல் காந்திக்கு 9% ஆதரவு என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7% ஆதரவு என்றும் தெரிவிக்கும் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் கல்வியறிவு கொண்ட நபர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
எந்தக் கேள்வி கேட்டாலும் டேட்டா இல்லை என மத்திய அரசு ஒரே பதிலைச் சொல்லும் காலத்தில், கருத்துக் கணிப்பு ஏஜென்சிகளும், ஊடகங்களும் 'தேவைக்கு ஏற்ப' தரவுகளை உற்பத்தி செய்து தருகின்றன என விமர்சித்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ராகுல் காந்திக்கு நிகராக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்துவது ஊடகங்கள் கிளப்பும் கட்டுக்கதை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

இந்தியா டுடே சர்வே
பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து 'மூட் ஆப் தி நேஷன்' என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கம். அரசியல் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு, அதன் மூலம் பெற்ற பதில்களின் அடிப்படையில் கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிடும். அந்தவகையில், இந்த முறை இந்தியா டுடே நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

மோடிக்கு ஆதரவு அதிகம்
இப்போதைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கும் 9 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 7 சதவீதம் பேர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வெறும் 9% ஆதரவு என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவருக்கு கிட்டத்தட்ட நிகராக 7% ஆதரவு என்றும் கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அதிகமா?
எதிர்கட்சித் தலைவர்களில் பாஜகவுக்கு சவால் விடுவதற்கு யார் மிகவும் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என 20% பேரும், மம்தா பானர்ஜி என 13% பேரும், ராகுல் காந்தி என 13% பேரும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சித்து வருகின்றன.

பிடிஆர் விளாசல்
இந்தக் கருத்துக்கணிப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுகவைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கட்டுக்கதைகளை உத்தரவின் பேரில் ஊடகங்களே உருவாக்குகின்றன என்று நினைக்கிறேன். யாராலும் வெல்ல முடியாத தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யும் முயற்சி நடக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கஸ்டமைஸ்டு டேட்டா
மேலும், ராகுல் காந்திக்கு 9% மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7% இருக்கும் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் கல்வியறிவு பெற்ற மற்றும் பகுத்தறிவு கொண்ட நபர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும். எதைக் கேட்டாலும் மத்திய அரசு 'டேட்டா இல்லை' என ஒரே பதிலைச் சொல்லும் காலத்தில், கருத்துக்கணிப்பு ஏஜென்சிகள், ஊடகங்கள் தேவைக்கேற்ப "கஸ்டமைஸ்டு டேட்டா"வை உற்பத்தி செய்கின்றன என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications